Published : 07 Feb 2019 12:30 PM
Last Updated : 07 Feb 2019 12:30 PM

மாநாடு படப்பிடிப்பு எப்போது? - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம்

’மாநாடு’ படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார்.

’வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து  நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ’மாநாடு’ படத்துக்கு தேதிகள் கொடுத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகளோடு, நடிகர்கள் தேர்வும் ஒரு சேர நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பூஜை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால், நடைபெறவில்லை. இதனால், படப்பிடிப்பு தாமதமாகிறது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஏன் இந்த தாமதம், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட கேள்விகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

எதற்கு நிறைய பணம் செலவழித்து, படப்பூஜை எல்லாம். அதெல்லாம் வேண்டாம். படப்பிடிப்பு தொடங்கப்படும் அன்றே சின்ன பூஜை வைத்துக் கொள்ளலாம் என்று சிம்பு சொன்னார். மேலும், அவர் தன் உடம்பைக் குறைக்க இன்னும் ஓரிரு தினங்களில் வெளிநாடு செல்லவுள்ளார். அத்துடன், படத்துக்காக தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொள்ளவுள்ளார்.

அவர் வெளிநாட்டிலிருந்து திரும்புவதற்குள், நாங்கள் இதர நடிகர்கள் மற்றும் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வையும் முடித்துவிடுவோம். உடனடியாக படப்பிடிப்பு தொடங்கி, எவ்வித தங்கு தடையின்றி நடத்தத் தான் ஆயுத்தமாகி வருகிறோம்.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

மேலும், இப்படத்தில் சிம்புவுடன் நடிக்க ராஷிகண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.இப்படத்துக்கு எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x