Published : 28 Sep 2014 03:28 PM
Last Updated : 28 Sep 2014 03:28 PM
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து (63) நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், வெங்கய்ய நாயுடு, அனந்த் குமார், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பதவியேற்ற ஆர்.எம்.லோதா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று பதவியேற்றார். இவர், 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வரை தலைமை நீதிபதி யாக பதவி வகிக்க உள்ளார்.
எச்.எல்.தத்து 1950-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹண்டிகாலில் பிறந்தார். 1975-ம் ஆண்டு பெங்களூரில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
1995-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக எச்.எல்.தத்து நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை கண்காணித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT