Published : 01 Feb 2019 11:03 AM
Last Updated : 01 Feb 2019 11:03 AM
சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை என்று 'மிக மிக அவசரம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
'அமைதிப்படை 2', 'கங்காரு' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'மிக மிக அவசரம்' என்னும் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இதில் பெண் காவலர் கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சீமான், அரீஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் சேரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது:
எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இப்படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும். படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.
நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT