Last Updated : 05 Feb, 2019 11:45 AM

 

Published : 05 Feb 2019 11:45 AM
Last Updated : 05 Feb 2019 11:45 AM

’துப்பறிவாளன்’ விஷால் ‘தமிழ் ராக்கர்ஸை’ கண்டுபிடிக்கட்டும்; இயக்குநர் வசந்தபாலன் ஆதங்கம்

துப்பறிவாளனாக இருக்கிற விஷால், இரும்புத்திரை கொண்டு அடக்கி நடித்துள்ள விஷால், முதலில் தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்கட்டும். அதற்காகத்தானே பதவிக்கு வந்தார் என்று இயக்குநர் வசந்தபாலன் பேசினார்.

’பொதுநலன் கருதி’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் சீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது:

இந்த விழாவுக்கு வந்தால், என்னுடைய ‘ஜெயில்’ திரைப்படம் வெளியாகுமா என்கிற சுயநலன் கருதித்தான், இந்த ‘பொதுநலன் கருதி’ திரைப்பட விழாவுக்கு வந்தேன்.

சிறிய திரைப்படங்களெல்லாம் ஓடவேண்டும். முதலில், அந்தப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவேண்டும். பரியேறும் பெருமாள் படத்துக்கு போகலாம் என்றால், காலைக் காட்சி இல்லை எனும் நிலை இருந்தது. பேரன்பு படத்துக்குச் செல்லலாம் என்றால், முக்கியமான தியேட்டர்களில் முக்கியமான நேரத்தில் ஷோ இல்லை.

இப்போது, வெளியாகி உள்ள சர்வம் தாளமயம் படத்தையும் பேரன்பு படத்தையும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டுவிட்டார்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துப்பறிவாளனாக இருக்கிறார். இரும்புத்திரை கொண்டு அடக்குகிறார். ஆனால் நிஜத்தில் தமிழ் ராக்கர்ஸைப் பிடிக்காமல் இருக்கிறார்.

திரையுலகிற்கும் சிறிய தயாரிப்பாளர்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்றுதானே இவர் பதவிக்கு வந்தார். வந்து ஒன்றுமே செய்யாமல் இருக்கிறார். எனக்கு பயமாக இருக்கிறது. என்னுடைய ‘ஜெயில்’ படம் வரும் போது, அந்தப் படமும் தமிழ் ராக்கர்ஸ்ல வந்துருமோனு பயமா இருக்கு.

முதல்ல தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிங்க. இல்லையெனில், பின்னாளில், இப்போது நலிவடைந்த கலைஞர்களுக்காக இளையராஜா விழா எடுத்தது போல், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்காகவும் இயக்குநர்களுக்காகவும் ரஹ்மான் விழா எடுக்கும் சூழல் உருவாகிவிடும்.

இவ்வாறு வசந்தபாலன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x