Last Updated : 21 Feb, 2019 09:42 PM

 

Published : 21 Feb 2019 09:42 PM
Last Updated : 21 Feb 2019 09:42 PM

தயாரிப்பாளர் சங்கத்தால் கைவிடப்பட்டதா பட வெளியீட்டு கட்டுப்பாட்டு குழு

தயாரிப்பாளர் சங்கத்தில் தொடங்கப்பட்ட 'பட வெளியீட்டு கட்டுப்பாட்டு குழு' தங்களது பணியை நிறுத்திக் கொண்டதாக கருதப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்றவுடன், படங்கள் வெளியீட்டுக்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, 'பட வெளியீட்டு கட்டுப்பாட்டு குழு' என்று ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் படங்கள் வெளியீட்டுக்கான தேதிகளைத் தீர்மானித்து வந்தார்கள்.

ஒரு படம் முழுமையாக தயாரானவுடன், இந்த தேதியில் வெளியிட விரும்புகிறோம் என்று 'பட வெளியீட்டு கட்டுப்பாட்டு குழு'விடம் கடிதம் அளிக்க வேண்டும். அக்குழு அந்த தேதியில் வேறு என்ன படங்கள் வெளியாகிறது, இந்த பட்ஜெட்டுக்கு இந்த தேதி சரியா உள்ளிட்ட பல விஷயங்களை கலந்து ஆலோசித்து இறுதி செய்வார்கள்.

இந்தக் குழு முடிவெடுக்காமல், 2018-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி 5 படங்கள் ஒரே தேதியில் வெளியானது. மேலும், பொங்கல் பண்டிகைக்கும் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்கள் வெளியானது. இச்சமயத்தில் இந்த இரண்டு தேதிக்கு மட்டும், குழு கட்டுப்பாடு இல்லை என்றும், இதர தேதிகளுக்கு அனுமதி பெறவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

ஆனால், அதற்கு பின்பு வெளியான அனைத்து படங்களுமே, தன்னிச்சையாக வெளியீட்டு தேதிகளை முடிவு செய்து அறிவித்தார்கள். இந்த வாரம் கூட 5 படங்கள் வெளியாகிறது. மேலும், பிப்ரவரி மாதத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமுமே 3 முதல் 4 படங்கள் வெளியான வண்ணமுள்ளன.  இதன் மூலம் இந்த குழு இப்போது செயல்படவில்லை என்று உறுதிப்படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம் தயாரிப்பு நிறுவனம், தங்களுக்கு இந்த தேதி வெளியீட்டை தயாரிப்பாளர் சங்கம் ஒதுக்கியுள்ளதாக கடிதம் ஒன்றை வெளியிடுவார்கள். இப்போது, அக்கடிதமும் வெளியிடப்படுவதில்லை.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகியிடம் கேட்ட போது, "பல தயாரிப்பாளர்கள் நாங்கள் ஏதோ பட வெளியீட்டில், அவர்களிடம் அடக்குமுறையை கையாள்வதாக நினைக்கிறார்கள். உண்மையில், அவர்களுடைய நல்லதுக்காக மட்டுமே செயல்பட்டு வந்தோம். இன்னும் சில நாட்களில் அக்குழு முழுமையாக செயல்பட தொடங்கும்.

இளையராஜா 75 நிகழ்ச்சி மற்றும் விரைவில் நடைபெறவுள்ள பொதுக்குழு உள்ளிட்ட பணிகளால் மட்டுமே அக்குழு செயல்படாமல் உள்ளது. பொதுக்குழு முடிந்தவுடன் முழுவீச்சில் செயல்படும்" என்று முடித்துக் கொண்டார்.

கோடை விடுமுறை நெருங்கும் சமயத்தில் பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில், பல படங்கள் ஒரே தேதியில் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x