Published : 13 Jan 2019 08:19 PM
Last Updated : 13 Jan 2019 08:19 PM

படப்பிடிப்பு நிறைவு: என்.ஜி.கே படக்குழுவினருக்கு தங்க காசு பரிசளித்த சூர்யா

'என்.ஜி.கே' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவில் பணிபுரிந்த அனைவருக்குமே தங்க காசு பரிசளித்துள்ளார் சூர்யா.

2019-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் 'என்.ஜி.கே' ஒன்று. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இடையே செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால், படப்பிடிப்பு தடைப்பட்டதால், பட வெளியீடும் தாமதமானது. செல்வராகவனுக்கு உடல்நிலை சரியானவுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு ஜனவரி 12-ம் தேதியுடன் முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் குழு, ஒளிப்பதிவாளர்கள் குழு, கலை இயக்குநர்கள் குழு என அனைவருக்கும் ஒரு சவரன் தங்க காசு பரிசளித்துள்ளார் சூர்யா. கடைசி நாளில் சூர்யா அளித்த பரிசால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

'என்.ஜி.கே' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் “சூர்யா சாருடனான பயணம் சிறப்பானதாக இருந்தது. அவருடைய திறமை ஈடுபாடு கண்டு வியந்துவிட்டேன். 'என்.ஜி.கே' படக்குழு அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா “செல்வராகவன் சார்.. திரைக்கும் முன்னும், திரைக்குப் பின்னும் என்னை புதிய உயரத்துக்கு நகர்த்தியதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x