Published : 22 Jan 2019 11:58 AM
Last Updated : 22 Jan 2019 11:58 AM
சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு இணக்கமாக இருப்பதற்காக மட்டுமே பல வருடங்களாக அரசியலைப் பயன்படுத்துபவர் மத்தியில் அஜித்தின் தெளிவு மரியாதைக்குரியது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி பாராட்டியுள்ளார்.
அண்மையில் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில்அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்ததாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன், அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் நேர்மையானவர்கள் என்று பாராட்டிப் பேசியிருந்தார். இதனால் அஜித்துக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) அஜித் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. நான் சினிமாவுக்குத் தொழில் முறையாக வந்தவன். அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் பாராட்டி ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு. நடிப்பைத் தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காக மட்டுமே பல வருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜித்தின் தெளிவு மரியாதைக்குரியது. 'தல' எப்போதும் ஒரு தனிரகம்!'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT