Published : 22 Jan 2019 09:49 AM
Last Updated : 22 Jan 2019 09:49 AM

பேனர் வையுங்கள், கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்றுங்கள்: கிண்டலால் சிம்பு ஆவேசம்

இணையத்தில் எழுந்த கிண்டலைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றியுள்ளார் சிம்பு. மேலும், ரசிகர்களுக்கான வேண்டுகோளையும் மாற்றினார்.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் வெளியீட்டின் போது கட்-அவுட், பேனர் எல்லாம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள் என்று சிம்பு தனது ரசிகர்களுக்காக வெளியிட்ட வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினார். 'இருப்பதே சில ரசிகர்கள் தான்', 'இதற்கே இப்படியா' என்று குறிப்பிட்டனர். இதற்கு பதிலடியாக சிம்பு தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 ஒரு வீடியோ வெளியிட்டேன். அதில் என்னோட படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி பார்க்காதீர்கள். 'கட்-அவுட்', 'பேனர்' எல்லாம் வைத்து 'பால் அபிஷேகம்' எல்லாம் பண்ணாதீர்கள் என்றேன். அதுக்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை என எடுத்துக் கொடுத்தீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன் எனச் சொல்லியிருந்தேன்.

இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள். எனக்கு இருக்கிறதே 2-3 ரசிகர்கள் தான் என்கிறார்கள். நம்ம ஒரு தப்பு செய்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். 2-3 ரசிகர்கள் தான் என்னும் போது ஏன் இதெல்லாம் பேச வேண்டும்.

ஆகையால் அந்த 2- 3 ரசிகர்களுக்கு மட்டும் சொல்கிறேன். இது என்னோட அன்புக் கட்டளை. இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு ப்ளக்ஸ் வைக்கிறீங்க, பேனர் வைக்கிறீங்க. கட்-அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள். வேற லெவலில் செய்யுங்கள். இதைத் தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

எனக்குத் தான் 2- 3 ரசிகர்கள் தானே இருக்கிறார்கள். அதனால் இதைச் செய்வது தப்பு கிடையாது. அந்தளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளும் கிடையாது. யாரும் கேள்வியும் கேட்கப் போறது கிடையாது. 'வந்தா ராஜாவாதான் வருவேன்' பட ரிலீஸுக்கு வேற லெவலில் செய்யுங்கள்.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x