Last Updated : 07 Dec, 2018 12:53 PM

 

Published : 07 Dec 2018 12:53 PM
Last Updated : 07 Dec 2018 12:53 PM

முடிவடையும் வாணி ராணி சீரியல்: ட்விட்டரில் ராதிகா நெகிழ்ச்சி

'வாணி ராணி' சீரியல் படப்பிடிப்பு முடிவடைவதை, தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி ரஜினி, கமல், சீரஞ்சிவி உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் ராதிகா. தற்போது அம்மா கதாபாத்திரம் உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகம் மட்டுமன்றி, சீரியல்கள் தயாரித்து, நடித்தும் வருகிறார். இதற்காக ராடன் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் தயாரித்து, நடித்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  'சித்தி' மாபெரும் வெற்றியடைந்தது.

தற்போது சில வருடங்களாக 'வாணி ராணி' என்ற சீரியலை தயாரித்து, அதில் அக்கா - தங்கை என்ற இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் ராதிகா. தற்போது அந்தச் சீரியலும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று (டிசம்பர் 7) 'வாணி ராணி' சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்களது 'வாணி ராணி' சீரியல் முடிவுக்கு வருவதால் கலவையான எண்ணோட்டங்கள் எழுகின்றன. இன்றுதான் கடைசி நாள் ஷூட். நீண்ட பயணம்.

நிறைய அனுபவம். சில மகிழ்ச்சியான தருணங்கள். சில வருத்தமான அழுத்தமான சோர்வான தருணங்கள். ஆனால், ராடானுக்காக களைப்பின்றி உழைத்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையும் ஊக்கமும் அளித்த சன் டிவிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் ராதிகா.

'வாணி ராணி' சீரியலைத் தொடர்ந்து 7 வேடங்களில் ராதிகா நடிக்கும் ‘சந்திரகுமாரி’ சீரியல் தயாராகி வருகிறது. இது அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x