Last Updated : 19 Dec, 2018 01:58 PM

 

Published : 19 Dec 2018 01:58 PM
Last Updated : 19 Dec 2018 01:58 PM

தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளில் அதிருப்தி: சங்கத்துக்குப் பூட்டு போட்டதால் பரபரப்பு

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கச் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்ததால், எதிர் தரப்பு சங்கத்துக்குப் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீட்டுக் குழு என பல வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி இந்த நிர்வாகம் செயல்படவில்லை என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தனர்.

தற்போது ஜே.கே.ரித்தீஷ், சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்தரப்பினர் வாட்ஸ் அப்பில் மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில் 18 குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அவை எதையுமே தயாரிப்பாளர் சங்கம் பண்ணவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இதனைக் கண்டித்து இன்று (டிசம்பர் 19) காலை 11 மணிக்கு தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்துக்கு ஒன்றாகச் சென்று கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.

அதன்படி இன்று (டிசம்பர் 19) காலை ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் சென்றார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அங்குள்ள அலுவலகத்திற்குள் சென்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.  அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கதிரேசன் எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

திடீரென்று எதிரணியினர் தயாரிப்பாளர் சங்கத்திலிருக்கும் தலைவர் அறைக்குப் பூட்டு போட்டு, விஷாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது. மேலும், சங்க அலுவலகத்திலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, வாசல் கதவுக்கு பூட்டு போட்டனர். அனைத்து சாவிகளையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x