Published : 09 Nov 2018 11:03 AM
Last Updated : 09 Nov 2018 11:03 AM

சர்கார் சர்ச்சை: இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து விட்டது; பா.ரஞ்சித் ட்வீட்

சர்கார் திரைப்படத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து விட்டது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. அத்திரைப்படத்தில், அரசு மக்களுக்கு தரும் இலவச பொருட்களை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், வில்லிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் ‘கோமளவல்லி’ என பெயரிட்டுள்ளதாகவும், புகார் எழுப்பி அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சர்கார் திரைப்படக் குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சென்னை, கோவை, மதுரை உட்பட பல மாவட்டங்களில் சர்கார் திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போஸ்டர்களை கிழித்தனர்.

சர்கார் திரைப்படக் குழுவினருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் அதிமுகவின் இத்தகைய செயலை தன் ட்விட்டர் பக்கத்தில் எதிர்த்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று” என பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x