Published : 23 Nov 2018 07:26 PM
Last Updated : 23 Nov 2018 07:26 PM
சமூக வலைதளங்களில் தன்னை ரசிகர்கள் கொண்டாடி வருவதை முன்னிட்டு, ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் கரண்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் என எங்கு சென்றாலும் கரண் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. கரணிசம், கரண் ஆர்மி, அடங்காத கரண் ரசிகர்கள், முரட்டு கரணியன்ஸ் என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார் கரண்.
மேலும், கரண் ரசிகர்கள் பல்வேறு பெயர்களில் ட்விட்டர் கணக்குகள் தொடங்கி, அவரைப் பற்றித் தினமும் பேசி வருகிறார்கள். ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் வரும் கரணின் பின்னணி இசையான ‘ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ்’ என்ற வார்த்தைகளோடு கரணின் படம் இல்லாத பின்னூட்டங்களே இல்லை எனலாம்.
தனக்கு இருக்கும் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில், ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறார் கரண். அவரது ட்விட்டர் கணக்கு @ActorKaranOffl.
தனது முதல் ட்வீட்டாக, “ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ் ப்ரதர்ஸ்... நான் தான் கரண். இது எனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம். போலிகளை நம்பவேண்டாம். அனைவரும் ஒன்றாக இருப்போம். #ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ்” என்று தெரிவித்திருக்கிறார் கரண். ட்விட்டர் தளத்தில் கரண் இணைந்திருப்பதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தனக்கு ஏற்பட்டுள்ள திடீர் சமூக வலைதள வரவேற்பு குறித்து, “நான் இவற்றையெல்லாம் முதலில் விளையாட்டாக நினைத்தேன். பின்புதான் அவர்கள் உண்மையாகவே என்னைப் பற்றி ட்விட்டரில் பதிவிடுகிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கரண் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT