Published : 11 Nov 2018 05:37 PM
Last Updated : 11 Nov 2018 05:37 PM

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: படக்குழுவினர் விவரம்!

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படக்குழுவினர் விவரத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் கதை விவாதம் மற்றும் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் ராஜமெளலி. உலகமெங்கும் பல வசூல் சாதனைகள், பல்வேறு விருதுகள், மக்களிடம் ஏகோபித்த ஆதரவு என ‘பாகுபலி’ படம் பல மகுடங்களைச் சூடியது. இதனால் ராஜமெளலியின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். என்ற இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை இணைத்து இயக்கப் போவதாக முதலில் அறிவித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி. இந்நிலையில், இன்று (நவம்பர் 11) இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் சீரஞ்சிவி கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.

படப்பூஜை நடைபெற்றிருப்பதால், முதல்முறையாக இதன் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கதை விஜயேந்திர பிரசாத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், கிராபிக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி, வசனம் சாய் மாதவ் புரா - கார்க்கி, திரைக்கதை மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்று அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தை தனய்யா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் இரண்டு நாயகர்கள் இருப்பதால், இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்படலாம். ஆனால், யார் நடிக்கப் போகின்றனர் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. எப்போதுமே ராஜமெளலி படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும். அந்த வகையில், இப்படத்தில் வில்லன் யார் என்பதையும் தெரிவிக்கவில்லை.

ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர். இருவரில் ஒருவர் வில்லன் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், படக்குழுவினர் எதையுமே உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x