Published : 18 Nov 2018 12:53 PM
Last Updated : 18 Nov 2018 12:53 PM

2.0 டிக்கெட் கூடுதல் விலை:  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; ரஜினி ரசிகர் மன்றம் எச்சரிக்கை

திரையரங்க உரிமையாளர்கள் இருக்கைகளுக்கு ஏற்ப நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கூடுதல் கட்டணங்களையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று ரஜினி ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்திய அளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட மாதங்களாக நடைபெற்ற கிராபிக்ஸ் பணிகள் ஒருவழியாக முடிவடைந்து, நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு.

இந்நிலையில் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட் விலை தொடர்பாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில், '' திரையரங்குகளில் ரசிகர் மன்றக்காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்தைத் தவிர வெளியில் யாருக்கும் விற்கக்கூடாது.

திரையரங்க உரிமையாளர்கள் இருக்கைகளுக்கு ஏற்ப நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கூடுதல் கட்டணங்களையும் ரசிகர்களிமிருந்து வசூலிக்கக் கூடாது.  இதை மீறிச் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் போது திரையரங்க டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம்.  பெரிய நடிகர்களின் படங்களுக்கு அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தொடர்ந்து ரசிகர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட் விலை குறித்து மட்டும் ரஜினி ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x