Published : 09 Nov 2018 04:01 PM
Last Updated : 09 Nov 2018 04:01 PM

கோவா சர்வதேச திரைப்பட விழா: 3 பிரிவுகளில் போட்டியிடும் ‘டூலெட்’

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று பிரிவுகளில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’.

ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நாயகன் - நாயகி என்றெல்லாம் கிடையாது. செழியனின் உதவியாளர் சந்தோஷும், நாட்டியக் கலைஞரான ஷீலாவும், தருண் என்ற சிறுவனும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், நாடகக் கலைஞர் ஆதிரா, எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோர் நடிப்பில் இந்தப் படத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

2017-ம் ஆண்டு கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அத்துடன், இந்த ஆண்டு (2018) சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் வென்றுள்ளது.

இந்நிலையில், கோவாவில் இந்த மாதம் (நவம்பர்) நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், 3 பிரிவுகளில் போட்டியிடுகிறது ‘டூலெட்’.

1. சிறந்த படத்திற்கான போட்டிப் பிரிவு: சர்வதேசப் படங்களுடன் முதன்முதலாக இந்தப் பிரிவில் ஒரு தமிழ்ப் படம் இடம்பெற்றுள்ளது. இதுவரை இப்பிரிவில் தமிழ்ப் படங்கள் இடம்பெற்றதே கிடையாது.

2. சிறந்த புதுமுக இயக்குநர்: இப்பிரிவு, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த வருடம்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சிறந்த புதுமுக இயக்குநர்களின் படைப்புகளை இப்பிரிவில் தேர்வுசெய்து, திரையிடுவார்கள்.

3. இந்தியன் பனோரமா: 2017-2018-ம் ஆண்டுகளில் தணிக்கைபெற்ற சிறந்த இந்தியப் படங்களைத் தேர்வுசெய்து, திரையிடுவார்கள். இந்தப் பிரிவில், ‘டூலெட்’ படத்துடன் சேர்ந்து ராம் இயக்கிய ‘பேரன்பு’, மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’, ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய ‘பாரம்’ ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x