Published : 31 Oct 2018 03:42 PM
Last Updated : 31 Oct 2018 03:42 PM
‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் மாதவன்.
1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார்.
இவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதில் நம்பி நாராயணனாக நடிக்க இருப்பதாக மாதவனும் உறுதிப்படுத்தினார். இப்படத்தின் டீஸர் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்பட்டது. இந்த டீஸருக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை, ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அவரோடு இணைந்து மாதவனும் இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், ‘இறுதிச்சுற்று’ படத்தில் கூடுதல் திரைக்கதையில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது முதன்முறையாக அவர் இயக்குநர் பொறுப்பைக் கையில் எடுத்திருக்கிறார்.
இதன்மூலம் விரைவில் அவர் தனியாகப் படம் இயக்குவார் என்பது உறுதிபடத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT