Published : 08 May 2018 02:11 PM
Last Updated : 08 May 2018 02:11 PM
இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கப்படும் படங்கள் 'அண்டாவ காணோம்' போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளிவரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும் என்று தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியுள்ளார்.
வடிவேல் இயக்கத்தில் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்டாவ காணோம். ஜே.எஸ். பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் சதீஷ்குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் பேசுகையில், ''தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை 'அண்டாவ காணோம்' திரைப்படம் நீக்கும். நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம் இது. குழந்தைகள் விடுமுறைக் காலத்தில் பார்க்க விரும்பும் படங்களைத் தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.
சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரைக் கவரும் படங்கள் வருவது வருத்தத்துக்குரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன்படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில் அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் 'அண்டாவ காணோம்' என் கூற்றை நிரூபிக்கும்.
இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கப்படும் படங்கள் 'அண்டாவ காணோம்' போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளிவரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்" என்கிறார் ஜேஎஸ்கே.
முன்னதாக, சமூக அக்கறையுடன் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சிறந்த முறையில் சென்சார் செய்த தணிக்கைக்குழு வாரியத்தை வாழ்த்துகிறேன் என்று ஜேஎஸ்கே கிண்டல் செய்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT