Published : 11 May 2018 09:14 PM
Last Updated : 11 May 2018 09:14 PM

நயன்தாராவுக்காகப் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்

நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காகப் பாடலொன்றை எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ...’ என்ற முதல் லிரிக்கல் வீடியோ, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து எழுதிய இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களை கவுதம் மேனன் பேசியிருப்பார்.

இந்நிலையில், ‘கல்யாண வயசு...’ என்ற இரண்டாவது லிரிக்கல் வீடியோ, வருகிற 17-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்று அறிவித்துள்ளார் அனிருத். அத்துடன், இந்தப் பாடலின் மூலம் முதன்முதலாக ஒருவர் பாடலாசிரியராக மாறியிருக்கிறார் என சஸ்பென்ஸ் வைத்தார்.

அந்த சஸ்பென்ஸ் தற்போது உடைந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் தான் அந்தப் பாடலாசிரியர் என அறிவித்துள்ளனர். நயன்தாராவுடன் இணைந்து ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் மறுபடியும் அவருடன் ஜோடி சேர இருக்கிறார். இந்நிலையில், அவருக்காகப் பாடல் எழுதியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீடியா வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், இன்று பாக்ஸ் ஆபீஸின் வசூல் மன்னன். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, தற்போது பாடலாசிரியராகவும் தன்னுடைய அடுத்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், சிவகார்த்திகேயனுக்கு ரஜினி என்றால் ரொம்பப் பிடிக்கும். பாடகரான ரஜினி, ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடலில் முதன்முறையாக வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x