Published : 22 May 2018 07:55 PM
Last Updated : 22 May 2018 07:55 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா மைத்துனர் பலி

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 100 நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நூறாவது நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

ஆனால், மக்கள் அதற்கும் அசராமல் போகவே, ஒருகட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இதுவரை (மாலை 7.30 மணி) 11 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான 11 பேரில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனர் செல்வராஜும் ஒருவர்.

“எனது அன்புத்தங்கையின் கணவர், ஆருயிர் மைத்துனர் ஜெ.செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்” என ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார் சில்வா. இந்தச் சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x