Published : 29 May 2024 11:19 AM
Last Updated : 29 May 2024 11:19 AM

“அரசியல் கேள்வி வேண்டாம்” - இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சென்னை: "இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன்" என்று இமயமலை செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்" வேண்டாம் என்று கூறினார்.

தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார்.

ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.

ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இந்த வருடமும் அவர் இமயமலை செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னைக்கு நேற்று திரும்பிய ரஜினிகாந்த், இன்று காலை தனது நண்பர்களுடன் இமயமலை செல்கிறார். அங்கு பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். அடுத்த மாதம் 3 அல்லது 4-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

பின்னர், ஜுன் முதல் வாரம் நடக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x