Published : 08 May 2024 09:56 AM
Last Updated : 08 May 2024 09:56 AM

“அமிதாப்புக்குப் பிறகு நான் இல்லாமல் வேறு யார்?” - ட்ரோல்களுக்கு கங்கனா பதிலடி

மண்டி: சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகையும் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் தன்னை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டு பேசியது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த ட்ரோல்களுக்கு கங்கனா பதிலளித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசத்திலிருந்து தேர்தலில் களம் இறங்கியுள்ள முதல் சினிமா நட்சத்திரம் இவரே. இதற்காக மண்டி தொகுதியில் அவர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா, “நான் ராஜஸ்தான் சென்றாலும், மேற்கு வங்கம் சென்றாலும், மணிப்பூர் சென்றாலும் எனக்கு அன்பும் மரியாதையும் அபரிமிதமாக கிடைப்பதை உணர்கிறேன். அமிதாப் பச்சனுக்குப் பிறகு இதுபோன்ற அன்பும் மரியாதையும் ஒருவருக்கு கிடைக்குமென்றால், அது எனக்கு மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.

கங்கனாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. நெட்டிசன்கள், எதிர்கட்சியினர் பலரும் கங்கனாவின் இந்த பேச்சை கட் செய்து மீம்களாக பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் தனக்கு எதிராக செய்யப்படும் ட்ரோல்களுக்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவிலும், அதன் மாநிலங்களிலும் ஒரு கலைஞராக எனது கலைக்கும், அதே நேரம் ஒரு தேசியவாதியாக எனது நேர்மைக்கும் அதீத அன்பும், வரவேற்பும் கிடைக்கிறது என தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். நடிப்பு மட்டுமின்றி, பெண்கள் முன்னேற்றத்துக்கான என்னுடைய செயல்பாடுகளும் பரவலாக பாராட்டப்படுகின்றன.

ஆட்சேபனை தெரிவிப்பவர்களிடன் கேட்க என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. அமிதாப் பச்சனுக்குப் பிறகு நான் இல்லை என்றால், இந்தியாவில் வேறு யாருக்கும் அதீத அன்பும் மரியாதையும் கிடைக்கிறது? கான்களுக்கா? கபூர்களுக்கா? யாருக்கு? எனக்கு தெரிந்தால், நான் என்னை திருத்திக் கொள்கிறேன்” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x