Published : 19 Apr 2024 12:16 PM
Last Updated : 19 Apr 2024 12:16 PM

“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி

தஞ்சாவூர்: “கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும்” என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் தனது வாக்கை செலுத்திய டி.ராஜேந்தர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “நான் இங்கு வாக்களிக்க வரும்போது ஒரு பெரியவர், தன்னுடைய வயதான தாயை அழைத்துக் கொண்டு வாக்களிக்க வந்திருந்தார். அவர் தனக்கான ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது மட்டுமின்றி, தன் தாயாரும் வாக்களிக்க வேண்டுமென்று இந்த இந்திய தேசத்துக்காக விரும்பும்போது, முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க வரவேண்டும்.

வெயில் சுட்டெரிக்கிறது. தோகையை விரித்தாடினால்தான் மயில். கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும்.

வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுப் போடும் காலம் முதல் இன்று இவிஎம் இயந்திரம் வரை காலங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இது ஏஐ காலம். இது கம்ப்யூட்டர் காலம். காலம் மாறிக் கொண்டே இருக்கலாம். கடவுளின் கருணையால் நன்றாக இருக்க வேண்டும் இந்த ஞாலம். கடவுளின் அருள் இருந்தால்தான் வாக்களிக்க வர முடியும். கடவுளின் அருள் இல்லையென்றால் எதுவுமே நடக்காது” இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x