Published : 07 Apr 2018 05:10 PM
Last Updated : 07 Apr 2018 05:10 PM

“தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அனைத்தும் தியேட்டர்களிடமே உள்ளன” - எஸ்.ஆர்.பிரபு

அதிக டிஜிட்டல் கட்டணத்துக்கு எதிராக கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராட்டம், தற்போது திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. ‘இந்தப் போராட்டம் ஏன்?’ என்பது குறித்து ஃபேஸ்புக்கில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பதிவு இது...

VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விஷயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை, அதன் பயனீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும், நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறிப்போய் உள்ள நமக்கு அது சிறிது காலம் தவிர்க்கப்படும்போது, அதைப்பற்றி தெளிவுபடுத்த பல தளங்கள் முற்பட்டதால் இந்த அளவுக்குப் பிரபலம் ஆகிவிட்டது. ஆனால், இந்த ஒரு வார்த்தைக்குப் பின் மறைந்திருந்த பல விஷயங்கள் இன்று வெளிவந்துள்ளதும் திரைத்துறைக்குப் பெரும் நன்மையே.

சினிமா உருவான காலகட்டம் முதல் பலதரப்பட்ட வடிவில் வரவு - செலவு இருந்ததால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் இடையே எந்த வரவு - செலவு, யார் யாருக்கு என்ற வரைமுறை இருந்தது. இடையே காலமாற்றத்தில் உருவான தொழில்நுட்ப மாற்றங்களை முறைப்படுத்த ஆட்கள் இல்லாமல் போக, திரையரங்க வருவாயில் சேவை நிறுவனங்களாக சில கார்ப்பரேட்டுகள் உட்புகுந்து வருடாவருடம் VPF என்ற பெயரில் சுமார் 40 கோடியும், ஆன்லைன் புக்கிங் என்ற பெயரில் சுமார் 80 கோடியும் தமிழகத்தில் மட்டும் தனியே எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

இதில், திரையரங்கை நோக்கி மக்களை வரவைக்கின்ற படத் தயாரிப்பாளருக்கு எந்தப் பங்கும் கிடையாது. இதைக் கேட்க ஆளில்லாமல் போகவே, திரையரங்கங்களும் நமக்கு மேலும் தனியே வருவாய் வரட்டுமே என்று அமைதியாக இருந்துவிட்டனர். இன்று ஏதோ தயாரிப்பாளர்கள் கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டது போல் கோபப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. இப்போது GST வேறு கூடுதலாக. இவையெல்லாம் ஒரு வகையில் மக்கள் தலையில்தான் அதிக சுமையாக விழுகிறது.

இந்த சமயத்தில் ஏதோ நல்லது நடந்தால் சரி என்று சிலர் இருந்தாலும், பலருக்குப் பல்வேறு குழப்பங்கள்...

1. ஒரு VPF–ற்காக இவ்வளவு இழப்புகள் தேவையா?

2. திடீரென ஒரே நாளில் மாற வேண்டும் என்று கேட்பது நியாயமா?

3. பட வெளியீட்டை நிறுத்துவது இருக்கட்டும், படப்பிடிப்பை ஏன் நிறுத்த வேண்டும்?

4. மற்ற மாநிலங்கள் 16% விலைக்குறைப்பை பெற்றுக்கொண்டு, அவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டும் என்ன பிரச்சினை?

5. நடிகர் சம்பளத்தை குறைத்தால் எல்லாம் சரியாகிவிடும். அதை விட்டுவிட்டு, அதைவிட சிறு விஷயங்களுக்கு சண்டை போடுவது நல்லதா?

6. நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், சினிமாக்காரர்களுக்கு இது தேவையா?

இப்படி பலவகையான கருத்துகள் தினம் வந்தவாறு உள்ளன. இவ்வளவு கேள்விகள் இருக்கும்பொழுது, அதை தெளிவுபடுத்துவது நல்லது என்பதாலேயே இந்தப் பதிவு முயற்சி!

1. VPF?

மீண்டும் மீண்டும் இதைப்பற்றிய பொய்ப்பிரச்சாரம் இங்கு பரப்பப்படுகிறது. VPF என்பது Virtual print fee-யே தவிர, Virtual projector fee கிடையாது என்று கூறி பலர் ஆவேசப்படுவதைப் பார்க்க முடிகிறது. அப்படியே ஆகட்டும் ஐயா, இனிமேல் எங்களுக்கு இந்த VPF சேவை என சொல்லப்படும் (Mastering, DCP encryption charges, KDM charges, Screening room charges for producer/artists, Satellite Bandwidth charges, Last mile logistic charges, Subtitle chargesand all charges relating to converting print to digital cinema package - DCP, compressing, transmitting and delivering the package to the Projector) அனைத்து சேவைகளையும் சுமார் 15000 ரூபாய்க்குப் பதிலாக வெறும் 3000 - 4000 ரூபாய்க்குத் தர சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்நிறுவனங்களுடன் நாங்கள் இந்த சேவை ஒப்பந்தம் செய்து கொள்கிறோம் என்றால், உடனே திரையரங்க உரிமையாளர்கள்...

“• நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளோம். அது முடியும் வரை நீங்கள் அவர்கள் (DSPs) சொல்லும் விலையில் அவர்கள் மூலமே பிரிண்ட் தரவேண்டும்.

• நீங்கள் பணம் தராவிட்டால் தொழில்நுட்பம் வளராது.

• புரஜெக்டர் குறுகிய காலத்தில் காலாவதியாகிவிடும். அதனால்தான் இந்தவிலை.

• உங்கள் செலவுகளைக் குறைக்க நாங்கள் உதவி செய்ததற்கு நீங்கள் செய்யவேண்டிய கைமாறு.

• இவ்வளவு காலம் கொடுத்தீர்கள். அதனால், இனிமேலும் நீங்களே தரவேண்டும்” என பலவாறு நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

Analog–ல் இருந்த Digital தொழில்நுட்ப மாற்றம் அவசியமானபொழுது, அதற்கு தயாரிப்பாளரிடம் வசூலித்தது சரி. அதேசமயம் தொழில்நுட்ப தர உயர்த்துதலுக்கும் தயாரிப்பாளரை செலவழிக்க வைப்பது நியாயமற்றது. அடுத்த மாநிலங்களில் என்னவோ, அதுவே நீங்களும் செய்யுங்கள் எனக் கூறுவது திசைதிருப்பும் முயற்சி என்பது இங்கு அனைவருக்கும் தெரியும். ஒரே யுக்தியை எவ்வளவு காலம்தான் பயன்படுத்துவது?

ஒரு திரையரங்கம், அதன் நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டே டிக்கெட் வருவாயில் தயாரிப்பாளருடன் பங்கிடும் சுமார் 50 - 60 சதவீதத்துடன் உபரியாக...

• திரையரங்க பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.1

• வாகன நிறுத்தக் கட்டணம்

• கேன்டீன் வருவாய்

• விளம்பர வருவாய்

என மேற்கண்ட வருவாய் காலம் காலமாகக் கிடைத்து வருகிறது. இதை வைத்தே திரையரங்கு இருக்கைகள், வரி, பராமரிப்பு, புரஜெக்டர் என எல்லா செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வருவாயை வைத்தும் வருமானம் போதவில்லை என்றால், இந்தத் தொழில் சார்ந்த வரியைக் குறைப்பது அல்லது மானியம் பெறுவது பற்றி அரசிடம் பேச யோசிக்க வேண்டுமே தவிர, தயாரிப்பாளர் மேல் சுமையைக் கடத்தக்கூடாது என்பதே என் வாதம்.

2. திடீரென ஒரே நாளில் மாற வேண்டும் என்று கேட்பது நியாயமா?

இந்த கோரிக்கைகள் காலம் காலமாகக் கேட்கப்பட்டு வந்தவைதான். VPF சம்பந்தமாக இரண்டரை வருடங்களுக்கு முன் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தது சிலருக்கு நியாபகம் இருக்க வாய்ப்பு உள்ளது. அன்று, ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராகத் திரைத்துறை போராடுகிறதே என சிரித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு தனியார் நிறுவனம் இவ்வளவு வலுப்பெறும்வரை அனைவரும் அஜாக்கிரதையாக விட்டதே இன்று இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டது. ‘மெர்சல்’ வெளியீடு சமயத்தில் அனைவரும் ஒன்றாகப் போராடுகையில், தயாரிப்பாளர்களின் இன்றைய கோரிக்கைகளில், VPF தவிர மற்ற அனைத்திற்கும் உடன்படுவதாகத் திரையரங்க முக்கியஸ்தர்கள் தயாரிப்பாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனால், கட்டண ஏற்றத்திற்கு அரசு ஒப்புக்கொண்டவுடன், அப்படியே தயாரிப்பாளர்களை விட்டுவிட்டு பட வெளியீட்டைப் பார்க்கச் சென்றுவிட்டனர். இனியும் வெறும் வாய்வார்த்தையை நம்ப தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தயாரிப்பாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கையில், அவை உதாசீனப்படுத்தப்படும்போது வேறு என்ன செய்வது? ஏறக்குறைய 95 சதவீதம் நட்டம் உள்ளபோது போராடாமல், வேறு எப்போது போராடுவது? இவை அனைத்தையும் செயல்படுத்த 2 மாதங்கள் போதும். ஆக, தயாரிப்பாளர்கள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கேட்பதில் தவறு எதுவும் இல்லையென்பதே என் கருத்து.

3. பட வெளியீட்டை நிறுத்துவது இருக்கட்டும், படப்பிடிப்பை நிறுத்த வேண்டுமா?

படங்கள் வெளியீடு நிறுத்தப்பட்டு உள்ளபோது, ஏற்கெனவே ரிலீஸுக்குத் தயாராக உள்ள படங்களோடு, மேலும் படங்கள் சேர்ந்தால் அவை அதிக பாதிப்புகளையே தருமே தவிர, எந்த நன்மையும் தரப்போவதில்லை. அனைத்து தயாரிப்பாளர்களும் நட்டத்தையே சந்திக்கும்பொழுது, இவற்றைச் சீரமைக்காமல் எவ்வளவு காலம் தள்ளிக்கொண்டே போவது? தமது சுயநலத்திற்காக மற்றவர்களைத் தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சிலரைத் தவிர, தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். இதை, தயாரிப்பாளர் சங்கம் என்றும் மறவாது என நம்புகிறேன். கடந்த காலங்களில் இல்லாத அளவு இன்று தயாரிப்பாளர் - தொழிலாளர்களிடையே நல்ல புரிதல் உள்ளது. இந்த போராட்டம்தான் திரைத்துறை சந்திக்கும் கடைசி போராட்டமாக இருக்க வேண்டும். அதற்கு இந்தப் புரிதல் உதவும் என நம்புகிறேன்.

4. மற்ற மாநிலங்கள் 16% பெற்றுக்கொண்டு அவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டும் என்ன பிரச்சினை?

தமிழ் சினிமா, மற்ற மாநிலங்களுக்கு ஒரு காலகட்டம்வரை சினிமா தலைநகரமாக விளங்கினாலும், இன்று என்னவோ மோசமான நிலையில்தான் உள்ளது. இதை சரிசெய்ய, இதை விடுத்து வேறு தருணம் கிடையாது. அதுமட்டுமல்ல, அந்தந்த மாநிலங்கள் இந்த விஷயத்தில் அவர்களுக்கென்று ஒரு திட்டத்தோடு அணுகுகிறார்கள். தமிழ் தயாரிப்பாளர்கள் இன்றே தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். வெகுவிரைவில் அங்கும் பெரிதாக இவை வெடிக்கும்.

5. நடிகர்கள் சம்பளத்தைக் குறைத்தால் எல்லாம் சரியாகிவிடும். அதை விட்டுவிட்டு, சிறு விஷயங்களுக்கு சண்டை போடுவது நல்லதா?

நடிகர்களின் சம்பளம் சீராக வேண்டும் எனில், கட்டண விற்பனையில் வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். குத்துமதிப்பான வசூல் செய்திகளை வைத்துக்கொண்டே அனைத்துப் படங்களும் திட்டமிடப்படுகின்றன. இதனால், சம்பளங்களும் அவ்வாறே கேட்கப்படுகிறது. இங்கு மனிதர்களை யாரும் நம்பத் தயாராக இல்லை. மனிதர்களும் அதற்கு இடம் கொடுப்பது இல்லை. ஆகவே, கட்டண விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதுமட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மையால் சம்பளப் பகிர்வு முறை, கசிவில்லாத வருவாய், வங்கிக்கடன் வாய்ப்புகள், முறையான கட்டணம் மற்றும் அனைத்துத்துறையினரிடையே நல்ல புரிதல் என பல்வேறு பயன்கள் உள்ளன. அதனால்தான், தயாரிப்பாளர் சங்கம் முதல்நாள் தொட்டே இவற்றை வலியுறுத்தி வருகிறது.

6. நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், சினிமாக்காரர்களுக்கு இது தேவையா?

சினிமா என்பது ஒரு தொழில். ஆனால், அரசியல் என்பது சேவை. ஒரு தொழில் நன்றாக இல்லையென்றால், அது சார்ந்த விஷயத்திற்காகப் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசியலும் சினிமாவும் மிக நெருக்கமானதாக உள்ளதால், சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளின் கடமையோடு ஒப்பிடப்பட்டு ஏளனத்திற்கு உள்ளாகின்றனர். இது மாற வேண்டும். ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழலில் இதற்கு சிறிதுகாலம் வாய்ப்பில்லை என்பதே உண்மை.

ஒரு வாதம் முன்வைக்கப்படும்பொழுது, அதற்கான தீர்வை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது வெறும் விளம்பரமாக அறியப்படும். இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது, இது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக மட்டுமே இருந்தது. இன்று அது திரையரங்கங்களுக்கு எதிரான போராட்டமாகத் தோன்றுவதற்கு காரணம், தயாரிப்பாளர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு திரையரங்கங்களிடமே இருக்கிறது என்பதால்தான். இது இன்று ஒரு பங்காளிச் சண்டையாக இருந்தாலும், நமக்குள்ளே பேசி தீர்த்துக்கொண்டால் இருவருக்கும் நலமானதாக அமையும். இல்லையெனில், இருவருக்கும் அது சாதகமாக அமையப் போவதில்லை. தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாமல் இந்தப் போராட்டம் முடிவடைந்தால், அனைவரின் கஷ்டங்களும் வீணாகிவிடும் என்பதாலேயே தயாரிப்பாளர்களும், அவர்களுடன் தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் உறுதியாக உள்ளனர்.

ஆகவே, தயாரிப்பாளர் சங்கம் இனிமேலும் காத்திராமல் தங்களது மாற்றுத் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x