Published : 22 Feb 2024 12:44 PM
Last Updated : 22 Feb 2024 12:44 PM

சர்ச்சை பேச்சு விவகாரம் | அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்

சென்னை: தன்னைப் பற்றி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்” என்று கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ஏ.வி.ராஜூ, அதில் தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூவுக்கு த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் த்ரிஷா குறித்து இணையத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், த்ரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x