Published : 22 Jan 2024 06:30 PM
Last Updated : 22 Jan 2024 06:30 PM

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா

சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது” என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இளையராஜா, “இன்றைய நாள் சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாப் புகழைத் தேடித் தரும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் செய்ய முடியும்? எல்லோராலும் செய்துவிட முடியுமா? யாராலும் செய்ய முடியாது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு என்று கடவுள் எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப்பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே.. அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது. அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இங்கு இருப்பது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஆறுதலை அளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் அது இருக்கும். மொத்த இந்தியாவுக்குமான கோயிலாக ஒன்று உருவாகியிருக்கிறது என்றால், அது அயோத்தி ராமர் கோயில்தான். மன்னர்கள் கோயில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோயில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்துள்ளார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x