Published : 06 Jan 2024 03:35 PM
Last Updated : 06 Jan 2024 03:35 PM

“ரிலாக்ஸ் செய்ய கூட அனுமதிக்கவில்லை” - ‘மிஷன் சாப்டர்-1’ அனுபவம் பகிர்ந்த அருண் விஜய்

சென்னை: “படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தரமால் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள்” என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்-1’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் அருண் விஜய், “பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர்-1’ என்பது எனக்கு மிகவும் சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம்.

நான் இதுவரை நடித்தப் படங்களிலேயே ‘மிஷன் சாப்டர்1’ தான் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரிப்ட் கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். ஏமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர்.

ஜீவி பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தரமால் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஜய் அழகாக மேனேஜ் செய்திருக்கிறார்.

என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும். ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களிலும் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

இயக்குநர் விஜய் பேசியதாவது, “நிறையப் படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால், இது புது அனுபவமாக இருந்தது. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது. இந்த வரிசையில் நாங்களும் வருகிறோம். பல சிரமங்களைத் தாண்டிதான் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். அருண் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார்.

சினிமாவில் உள்ள திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இருப்பார். ஏமி,இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம் தான் படத்தின் ஆன்மா. தொழில்நுட்பக்குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் ‘மிஷன் சாப்டர்-1’ உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x