Published : 28 Dec 2023 04:22 PM
Last Updated : 28 Dec 2023 04:22 PM

“கருப்பை வாரி பூசிக்கொண்டு ஜெயித்தவர் விஜயகாந்த்” - மாரி செல்வராஜ் புகழஞ்சலி

சென்னை: “அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்” என மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதில், "என் அம்மாவுக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த். அவரின் துணிச்சல் மிகவும் பிடிக்கும். நான் சிறுவனாக இருந்தபோது விஜயகாந்த் தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் வழங்க வந்திருந்தார். அந்த விழாவுக்கு என்னையும் எனது அம்மா அழைத்துச் சென்றதால் அப்போது முதல்முறையாக கேப்டனை சந்தித்தேன். அப்போதே அவரை பார்ப்பது அவ்வளவு பிரமிப்பாக இருந்தது.

அலையோசை அவரின் படங்களில் நான் அதிகம் பார்த்தது. அவரின் நிறமும், விழிகளும் எனக்குள் ஆழமாக பதிந்துள்ளன. கருப்பை வாரி பூசிக் கொண்டு ஜெயித்தவர். நெருப்பு மாதிரியான இப்படி ஒரு ஹீரோ கிடைக்க மாட்டாரோ என ஏங்கி இருக்கிறேன். நிச்சயம் இது பெரிய இழப்புதான்.

ரஜினி ரசிகராக இருந்தாலும் சரி, கமல் ரசிகராக இருந்தாலும் சரி விஜயகாந்த் என்றால் சொந்தம் கொண்டாடி கொள்வது கிராமங்களில் இயல்பாக இருந்தது. கிராமங்களில் அதிகமாக திரை கட்டி திரையிடப்பட்ட படம் விஜயகாந்த் சாரின் படங்கள்தான். காரணம் அனைவருக்கும் பிடித்தவர். நம்மில் ஒருவர் என்று மக்களை நினைக்க வைத்தவர்.

சினிமா நடிகர் என்கிற பிம்பத்தை தாண்டி, அவரின் குரல் மக்களிடம் நேரடியாக சென்று சேர்ந்தது. கிராமங்களில் விஜயகாந்தின் படங்களின் வசனங்கள் ஒலிநாடாக்களாக இரவு முழுவதும் ஒலிக்கப்பட்டு இருக்கும். அவரின் குரலை கேட்டு கேட்டு கிராம மக்களிடம் நெருக்கமாக இருந்தவர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x