Published : 27 Dec 2023 02:41 PM
Last Updated : 27 Dec 2023 02:41 PM

‘அயலான்’ படத்துக்கு சம்பளம் பெறவில்லை: சிவகார்த்திகேயன் பகிர்வு

சென்னை: ‘அயலான்’ திரைப்படத்தில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கரோனா, கிராபிக்ஸ் பணிகளில் இழுபறி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே சென்று, ஒருவழியாக வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.

இதையொட்டி ’அயலான்’ படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில், “சம்பளம் வேண்டுமா, ‘அயலான்’ படம் வெளியாக வேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்தப் படம் ஒரு தொலைநோக்குப் பார்வை. இந்த பட்ஜெட்டில், நம் ஊரில் இவ்வளவு பெரிய படத்தை உருவாக்க முடியும் என்று காட்டத்தான் இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படம் தொடங்கப்பட்டபோது பான் இந்தியா என்ற வார்த்தையே கிடையாது. அப்போது ‘பாகுபலி 1’ மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.

தமிழில் ஏன் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது? இப்படி ஒரு படத்தை எடுத்தால் இதேபோல நிறைய படம் தொடர்ந்து வரும் என்ற நோக்கில்தான் இதனை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள். இந்த தொலைநோக்குப் பார்வை நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ‘எனக்கு சம்பளம் வேண்டாம். படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டேன்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x