Published : 18 Dec 2023 04:26 PM
Last Updated : 18 Dec 2023 04:26 PM

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

ஆர்.கே.சுரேஷ் | கோப்புப்படம்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடமிருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பணமோசடியில் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், பாஜக மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்புள்ளதாக கூறி அவருக்கு போலீஸார் சம்மன் பிறப்பித்துள்ளனர். அவர் தனது மனைவியுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெறக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பண மோசடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வரும் டிச.10-ம் தேதி துபாயில் இருந்து சென்னை வரவுள்ளதால் லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், சென்னை திரும்பியவுடன் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, டிச.10-ம் தேதி சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ், டிச.12 மற்றும் டிச.13 ஆம் தேதிகளில் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆர்.கே.சுரேஷ் அளித்த வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த நீதிபதி, மீண்டும் விசாரணைக்கு தேவைப்பட்டால் புதிதாக சம்மன் அனுப்பும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x