Published : 14 Dec 2023 11:16 PM
Last Updated : 14 Dec 2023 11:16 PM

“கேப்டனை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்” - இயக்குநர் பாண்டிராஜ் வேதனைப் பதிவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என இயக்குநர் பாண்டிராஜ் பதிவிட்டுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இன்று (டிச.14) சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேடையில் விஜயகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இந்த நிலையில், விஜயகாந்துக்கு ஓய்வு தேவை என்று இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கேப்டன் விஜய்காந்த்துக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பாண்டிராஜின் இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் ஆமோதித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x