Published : 05 Jan 2018 07:15 PM
Last Updated : 05 Jan 2018 07:15 PM
இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்க்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.
'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், '' 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.
'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், அந்தப் படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்னேஷ் சிவன் இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்னேஷ் சிவன் இந்தப் படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பைப் போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். 'அயன்' படத்தில் வருவது போல் பிரெஷ்ஷான சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்'' என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT