Published : 28 Jan 2018 10:31 AM
Last Updated : 28 Jan 2018 10:31 AM

‘மாமனிதன்’ படத்துக்காக மகன்களுடன் சேர்ந்து இசையமைக்கிறார்: இளையராஜாவுடன் வைரமுத்துவை இணைத்து வைக்க முயற்சி - 31 ஆண்டுகளுக்கு பிறகு இணையுமா கூட்டணி?

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ‘மாமனிதன்’ படத்துக்காக தனது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருடனும் இணைந்து இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் மூலம் 31 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் இளையராஜா - வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனுராமசாமி இறங்கியுள்ளார்.

‘தர்மதுரை’ படத்தை அடுத்து இயக்குநர் சீனு ராமசாமி ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கவுள்ளார். உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளார். இப்படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மூவரும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது :

வயல் சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதைதான் ‘கண்ணே கலைமானே’. குடும்ப உறவுகளின் புனிதத்தை சொல்லும் படமாக இது இருக்கும். ‘மூன்றாம் பிறை’ படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின் வரி. அதுவும் அவர் கடைசியாக எழுதிய பாடலின் வரி.

என் ஆசான்களான இயக்குநர் பாலு மகேந்திராவும், கவிஞர் கண்ணதாசனும் என் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாவர்கள். அவர்கள் இணைந்து பணியாற்றிய படத்தின் பாடல் வரியை படத்தின் தலைப்பாக வைப்பது அவர்கள் என் கூடவே இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.

அடுத்து இயக்கவுள்ள ‘மாமனிதன்’ படத்தின் வேலைகளை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இப்படம் மனித வாழ்வின் முக்கியத்துவத்தை தெளிவு படுத்தும் படமாக இருக்கும். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். அதோடு, மகிழ்ச்சி செய்தியாக அப்பா, மகன்கள் மூவரும் இணைந்து இசையமைக்கும் விஷயத்தையும் கூறினார்.

நான் பெரிதும் மதிக்கும் மும்மூர்த்திகள், இப்படத்தில் இணைவது ஆச்சரிய பரிசாகவே இருந்தது. இந்த ஆண்டில் மூன்று திரைக்கதை புத்தகங்களை முடித்து படமாக்க திட்டமிட்டிருந்தேன். இந்த இரு படங்களை அடுத்து மூன்றாவதாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு உள்ளது. அதில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இயக்கிய ‘சிறைப்பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்ற பாடல்தான் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய கடைசி பாடல். அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் இருவரையும் இணைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது ‘மாமனிதன்’ படத்துக்காக மீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x