Published : 10 Sep 2023 05:53 AM
Last Updated : 10 Sep 2023 05:53 AM

ஜெயம் ரவியின் தோற்றத்துக்கு ஒரு வருடம் காத்திருந்த இயக்குநர்

சென்னை: ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படம், ‘சைரன்’. இதை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடிக்கின்றனர். யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு செல்வகுமார் எஸ்.கே.ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் முதல் தோற்றம் வெளியாகி இருக்கிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கையில் விலங்குடன் டீ குடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியின் தோற்றம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபற்றி இயக்குநர் ஆண்டனி பாக்யராஜிடம் கேட்டபோது கூறியதாவது:

இதுவரை பார்க்காத தோற்றத்தில் ஜெயம் ரவி இதில் நடிக்கிறார். அவருக்கு 2 தோற்றம் இருக்கிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட போஸ்டரில் ஆம்புலன்ஸ் இருந்தது. இந்த போஸ்டரில் போலீஸ் வாகனம் இருக்கிறது. எந்த ‘சைரனை’ பேசுகிறோம் என்பது கதையோடு சேர்ந்தது. இப்போது வெளியாகி இருக்கிற தோற்றம்தான் கதையின் உயிர். 45 வயதான ஒருவரின் தோற்றம் போல தெரியும் இந்த லுக் கதையில் முக்கிய பங்கு இருக்கிறது. அதனால் இந்த தோற்றத்தை விஷுவலாக வெளியிட்டுள்ளோம். இந்தப் படத்தின் முகவுரை என இதைச் சொல்லலாம்.

ஜெயம் ரவியின் இந்தத் தோற்றத்துக்காக ஒன்றரை வருடம் காத்திருந்திருந்தேன். ‘பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’, ‘இறைவன்’ படங்களில் அவர் வேறு தோற்றங்களில் இருந்தார். அதை முடித்துவிட்டு இந்தத் தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ், கதையை நகர்த்தும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஹீரோவை எப்படி பார்க்கிறோமோ அதே போல அவரையும் பார்க்கலாம். அனுபமா பரமேஸ்வரன் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு ஆண்டனி பாக்யராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x