Published : 10 Sep 2023 05:46 AM
Last Updated : 10 Sep 2023 05:46 AM

‘ஆர் யூ ஓகே பேபி?’ விவாதத்தை ஏற்படுத்தும்! - லட்சுமி ராமகிருஷ்ணன் நம்பிக்கை

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஹவுஸ் ஓனர்’ உட்பட சில படங்களை இயக்கி இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது இயக்கியுள்ள படம், ‘ஆர் யூ ஓகே பேபி?’. வரும் 22ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசினோம்.

இது குழந்தை தொடர்பான கதையா?

ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது பற்றிய படம்தான். அது தொடர்பான 3 பெண்களைப் பற்றிய கதை. ஆனாலும் அதுக்குப் பின்னால உள்ள சட்ட விஷயங்களையும் சொல்றோம். ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட குற்றம் நடக்குது. குற்றத்தோட விளைவுகள், பிரச்சினைகள், அது தொடர்பா நடக்கிற விசாரணை நடைமுறைகள், குழந்தைக்குத் தொடர்பானவங்களோட எமோஷனல் விஷயங்கள்... இப்படி பல விஷயங்களை இந்தப் படம் பேசும். இந்தச் சமூகத்துக்குத் தேவையான படம்.

உண்மைச் சம்பவக் கதைன்னு சொன்னாங்களே?

ஒரு டாக் ஷோவுல நான் பார்த்த சம்பவம்தான் இந்தப் படத்தோட கதை. நான் நடத்திய ஷோவுல நடந்தது இல்லை. வேறொரு நிகழ்ச்சியில பார்த்த சம்பவம். அதை சினிமாவா பண்ணலாமேன்னு அந்தக் கதை என்னைத் தூண்டுச்சு. அதோட, இது சொல்லப்பட வேண்டிய கதைன்னும் நினைச்சேன். அப்படித்தான் இந்தப் படம் உருவாச்சு. ரிலீஸுக்கு பிறகு, நான் சொல்லியிருக்கிற விஷயம் விவாதிக்கப்படும்னு நினைக்கிறேன்.

அபிராமி, சமுத்திரக்கனி இந்தக் கதைக்குள்ள எப்படி வந்தாங்க?

அபிராமியும் நானும் ரொம்ப நாளா இந்தக் கதைப் பற்றி பேசிட்டு இருக்கோம். நாங்க சேர்ந்து படம் பண்ணணும்னு ஆசை. முந்தைய படங்கள்ல அது நடக்காம போயிடுச்சு. இந்த கதாபாத்திரத்தை எழுதும்போது அவங்களை மனசுல வச்சுதான் எழுதினேன். ஏன்னா, இந்தக் கதைல அவங்களுக்கு ‘ஸ்பெஷல் அட்டாச்மென்ட்’ இருக்கு. அவங்களை எமோ ஷனலாடச் பண்ணின கதை இது. அவங்க, குழந்தையை தத்தெடுத்த அம்மாவா நடிச்சிருக்காங்க. கணவன் கேரக்டருக்கு சமுத்திரக்கனி சார் பொருத்தமா இருப்பார்னு நினைச்சு கூப்பிட்டேன். ஓகே நடிக்கிறேன்னு சொல்லிட்டார். தமிழ், தெலுங்குன்னு ரொம்ப பிசியா இருக்கிற நடிகர், அவர். இதுவரை அவர் பண்ணாத களத்தில் நடித்திருக்கிறார்.

இளையராஜாவோட பணியாற்றிய அனுபவம்...

அவர் இசையை கேட்டுதான் வளர்ந்தோம். அவர் பெரிய அனுபவசாலி. அவர்கிட்ட ‘எனக்கு இப்படி பாட்டு வேணும், இப்படி இசை இருக்கணும்’னு கேட்கிறதுக்கு பயம். ஏன்னா நான் சாதாரண இயக்குநர். ஆனா, அவர் ரொம்ப இயல்பா எங்கிட்ட பேசி, கதைக்கு என்ன தேவையோ அதை பண்ணிக்கொடுத்தார். அவர் என்னை பக்கத்துல வச்சு ரீரெக்கார்டிங் பண்ணினது எனக்கு கிடைச்ச அருமையான அனுபவம். படத்துல 15 நிமிஷம், கோர்ட்ல கதை நடக்கும். அந்த இடத்துல வர்ற பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்.

மற்ற கதாபாத்திரங்கள் பற்றி...

‘முருகா’ அசோக் நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருக்கார். அவர் இதுல நடிச்சது எனக்கு ஆச்சரியம்தான். ஏன்னா, என் முந்தைய படத்துல நடிச்ச ஒரு நடிகரை, இந்த கேரக்டருக்கு கேட்டதும் மறுத்துட்டார். ஆனா, அசோக் எந்த கேள்வியும் கேட்காம நடிச்சார். அதே போல கலைராணி, முல்லையரசி, ‘ஆடுகளம்’ நரேன், மிஷ்கின், பாவெல் நவகீதன்... இப்படி நிறைய பேர் நடிச்சிருக்காங்க.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x