Published : 13 Dec 2017 06:33 PM
Last Updated : 13 Dec 2017 06:33 PM

அலைச்சலுக்கு இனி அவசியமில்லை!

கான் திரைப்பட விழாவின் பத்து விருதுகளில் தலைசிறந்த விருதாகக் கருதப்படுவது ‘பாம் டி’ஓர்’ என அழைக்கப்படும் தங்கப்பனை விருது. அதை இந்த ஆண்டு கானில் தட்டிவந்திருக்கும் ‘தி ஸ்கொயர்’ (The Square) என்ற ஸ்வீடிஷ் மொழிப் படத்தின் திரையிடலுடன், சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் நாளை (டிசம்பர் 14) மாலை 6.15 மணிக்கு கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது 15-வது சென்னை சர்வதேசப் பட விழா.

கோவா, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, டெல்லி எனப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் பல இருந்தாலும் சென்னை சர்வதேசப் பட விழாவுக்காக ஒவ்வொரு ஆண்டும் காத்திருக்கும் கண்கள் ஏராளம். டிசம்பர் 14, முதல் 21 தேதிவரை 8 நாட்கள், உலக அளவில் விருதுகளையும் பரிசுகளையும் வென்ற 50 நாடுகளின் 150 படங்களை இடைவிடாமல் ரசிக்க அழைக்கிறது இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.

சென்னை திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகும் உலகப் படங்களுக்குத் தணிக்கையிலிருந்து சிறப்பு விலக்கு அளிக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம். மாநில அரசோ திரைப்பட விழாவை நடத்துவதற்கான நிதியை வழங்கி சினிமா ரசனையை வளர்க்கத் தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறது. இந்த அமைப்புகளோடு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC), ‘தி இந்து’ தமிழ், ஆங்கில நாளிதழ்களுடன் இணைந்து ‘இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ இந்தப் படவிழாவை வெற்றிகரமாக நடத்திவருகிறது.

கடந்த ஆண்டு சென்னை அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வடபழனி ஆகிய வெவ்வேறு பகுதிகளில் இருந்த திரையரங்குகள் திரையிடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டதால் சினிமா ஆர்வலர்களுக்கு அலைச்சலாக அமைந்துவிட்டது. இதைக் கருத்தில்கொண்ட இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், இம்முறை அண்ணா சாலையில் வெகு அருகருகே அமைந்துள்ள தேவி, தேவி பாலா, கேசினோ, அண்ணா, சத்யம், தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் சென்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய ஏழு திரையரங்குகளைத் தேர்வுசெய்து உறுதிப்படுத்தியிருக்கிறது.

இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் செயலாளரும், 15-வது சென்னை சர்வதேசப் படவிழாவின் இயக்குநருமான தங்கராஜிடம் கேட்டபோது "‘உலக சினிமா’ (World Cinema), ‘திரை தேசம்’ (Country Focus), ‘காலம் மறக்காத படங்கள்’ (Retrospective), ‘தற்காலத் திறமைகள்- ஜெர்மானியப் படங்கள்’ (Contemporary German Films), ‘இந்தியன் பனோரமா’(Indian Panorama), தமிழ்ப் படப் போட்டி’(Tamil Film Competition) ஆகிய ஆறு பிரிவுகளில் சுமார் 150 திரைப்படங்களைத் திரையிட இருக்கிறோம்.

ஜெர்மன் நாட்டு சினிமாவில் தற்போது கவனிக்கத்தக்க திறமையாளர்களாக இருக்கும் ஆறு இயக்குநர்களின் படங்களை கதே இன்ஸ்டியூட் தேர்வு (Goethe Institute) தேர்வுசெய்து கொடுத்திருக்கிறது. திரைதேசம் பிரிவில் இம்முறை எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக தென்கொரிய நாட்டின் ஆறு சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் உலகப்புகழ் இயக்குநர் கிம் கி டுக்கின் ‘தி நெட்’ (THE NET) படமும் ஒன்று. மற்றொரு முக்கிய கொரிய இயக்குநரான ஹாங் சாங்-சூவின் (Hong Sang-soo) இரண்டு படங்கள் திரையிடப்படுகின்றன. ‘த டே ஆஃப்டர்’ (The Day After), ‘க்ளேர்ஸ் கேமரா’ (‘Claire's Camera) ஆகிய இரண்டு படங்களுமே நடந்துமுடிந்த கான் படவிழாவில் போட்டிப் பிரிவிலும். சிறப்புத் திரையிடலிலும் இடம்பிடித்த படங்கள் இவை.

‘காலம் மறக்காத படங்கள்’ பிரிவில் ஜெர்மானிய இயக்குநர் கிறிஸ்டியன் ச்சோ சொவ்வின் (Christian Schwo Chow) மாஸ்டர் பீஸ் என்று கருதப்படும் நான்கு படங்கள் திரையிடப்படவுள்ளன. அவற்றில் புகழ்பெற்ற ஜெர்மானிய பெண்ணிய ஓவியர் பவுலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பவுலா’ ரசிகர்களைக் கண்டிப்பாக கவரும்" என்றார்.

இதுதவிர ‘ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஷோகேஸ்’ என்ற துணைப் பிரிவின் கீழ் ஆஸ்திரேலியாவின் சென்னை தூதரகம் தேர்ந்தெடுத்து அளித்துள்ள நான்கு படங்கள், டெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகம் தேர்வுசெய்து அளித்துள்ள மூன்று படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் '8 தோட்டாக்கள்', 'அறம்', 'கடுகு', 'குரங்கு பொம்மை', 'மாநகரம்', 'மகளிர் மட்டும்', 'மனுசங்கடா', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'ஒரு குப்பை கதை', 'தரமணி', 'துப்பறிவாளன்' மற்றும் 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x