Published : 06 Sep 2023 06:09 AM
Last Updated : 06 Sep 2023 06:09 AM

இசையமைக்க மீண்டும் ஒப்புக்கொண்டது ஏன்? - டி.ராஜேந்தர் விளக்கம்

சிஆர்டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘நான் கடைசி வரை தமிழன்'. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “பண்ணாரி அம்மன் படத்துக்குப் பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்தப் படத்தின் தலைப்பில் இருக்கும் தமிழன் என்ற வார்த்தைதான் இந்தப் படத்துக்கு நான் இசை அமைக்கக் காரணம். நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன். ‘நான் கடைசி வரை தமிழன்’ படத்தில் தமிழ் இருக்கிறது. இயக்குநர் ராஜேந்திரனிடம் எனக்குப் பிடித்தது பிடிவாதம். நானும் பிடிவாதக்காரன். அவரிடம், ‘ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க? உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க, பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க’ என்றேன். ‘இல்லை, கடைசி வரை தமிழன் தான் பிடித்திருக்கிறது’ என்றார். அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது, மலைப்பு. தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

விழாவில், தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே. அன்புசெல்வன், இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர், தயாரிப்பாளர் நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x