Last Updated : 03 Nov, 2017 04:32 PM

 

Published : 03 Nov 2017 04:32 PM
Last Updated : 03 Nov 2017 04:32 PM

நடிகர்கள் சம்பள விவகாரம்: சித்தார்த் காட்டம்

முட்டாள் மாதிரி பேசாதீர்கள் என்று நடிகர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சித்தார்த் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'அவள்'. இந்தப் படம் காமெடி கலக்காமல் முழுக்க ஹாரர் பாணியில் திகிலடைய வைக்கும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் திருட்டு டிவிடியில் படம் பார்க்க இருப்பவர்களுக்கு சித்தார்த் தெரிவித்திருப்பதாவது:

மிகவும் அருமையான தொழில்நுட்ப கலைஞர்களோடு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். எவ்வளவோதான் சொன்னாலும், போன் மற்றும் திருட்டு டிவிடியில் தான் பார்ப்பேன் என்று இருப்பவர்களுக்கு.. தயவு செய்து இப்படத்தை திரையரங்கில் பாருங்கள். இல்லையென்றால் பார்க்காதீர்கள். ஒருவேளை போன் மற்றும் லேப்டாப்பில் பார்க்க ஆசைப்பட்டால், எங்களுடைய படத்திலிருக்கும் பேய் உங்களுடைய வீட்டிற்கு வந்து உங்களை சாகடிக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

திருட்டு டிவிடியில் படத்தைப் பார்க்காதீர்கள். அது ஒரு கேவலமான பிழைப்பு. 'சினிமாக்காரன் தானே நீ, அதான் நிறைய சம்பாதிக்கிறாயே' என்று கேட்பவர்களுக்கு எல்லாம் என்னுடைய பதில் ஒன்றே ஒன்று தான். முட்டாள் மாதிரி பேசாதீர்கள். என்ன பேசுகிறீர்களோ, புரிந்துக் கொண்டு பேசுங்கள்.

சினிமா ஒன்றை தயாரித்து, அதை வெளியிடுவதற்கு தவம் கிடக்கிறோம். பணத்தை முதலீடு செய்து, பலர் அதை எடுக்க முடியாமல் இருக்கிறோம். ஆகவே, படத்தை திரையரங்கில் மட்டுமே பாருங்கள்

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x