Published : 20 Jul 2023 05:36 AM
Last Updated : 20 Jul 2023 05:36 AM

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு 1 வருட சிறை

ஹைதராபாத்: தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ‘இதுதான்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் மனைவி நடிகை ஜீவிதா. இவர்களுக்கு 2 மகள்கள். இருவரும் நடித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். அவர் நடத்தும் ரத்த வங்கிக்குத் தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாகக் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராஜசேகரும் ஜீவிதாவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடக்கும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகரும் ஜீவிதாவும் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17- வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

12 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சுபா நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார். அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையைத் தவறாகப் பேசியது நிரூபணம் ஆனதால் ராஜ சேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டியதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x