Published : 15 Jul 2023 12:33 PM
Last Updated : 15 Jul 2023 12:33 PM

“வலியை ஒரு புல்லாங்குழல் இசைபோல  உணர்த்திவிட்டார் மாரி” - ஆர்.கே.செல்வமணி புகழாரம்

சென்னை: ‘மாமன்னன்’ படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கங்களுக்கும் நேற்று (ஜூலை 14) ‘மாமன்னன்’ சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் லிங்குசாமி, எழில், உள்ளிட்ட பலரும் படத்தை பார்த்தனர்.

பின்னர் படம் குறித்து பேசிய ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றிப் படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள். நான் படத்தை பார்த்துவிட்டு அனைவருக்கும் போன் செய்து வாழ்த்து கூறினேன். வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம், மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்மையாக மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார். அவரது உழைப்பு அபாரமானது. உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனக்கு ஒரு பாதிப்பை மனதில் ஏற்படுத்தி விட்டது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த படத்தை தந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x