Published : 12 Jul 2023 11:36 AM
Last Updated : 12 Jul 2023 11:36 AM

சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி 

சென்னை: தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்க்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமே என்று என்னிடம் பலரும் சொல்கின்றனர். என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சினை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. அது நான் நடித்த படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு உள்ளது. அந்த படத்திற்கு வரும் பிரச்சினைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயனின் இந்த பேச்சுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், “தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x