Published : 08 Jul 2023 10:04 AM
Last Updated : 08 Jul 2023 10:04 AM

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ‘ஆதிபுருஷ்’ வசனகர்த்தா

மும்பை: மக்களின் உணர்வுகளை புண்படுத்திய ’ஆதிபுருஷ்’ வசனங்களுக்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தெரிவித்துள்ளார்.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கிய திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.

எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் படத்தின் வசனகர்த்தாவான மனோஜ் முன்டாஷிர் சுக்லாவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்ததால் அவரது வீட்டுக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு வழங்கினர். இந்த நிலையில், ’ஆதிபுருஷ்’ வசனங்களுக்காக மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ’ஆதிபுருஷ்’ படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கைகூப்பி நான் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரபு பஜ்ரங்பலி நம்மை ஒன்றிணைத்து, நம்முடைய புனித சனாதனத்துக்கும், நமது உயர்ந்த தேசத்துக்கும் நாம் சேவை புரிவதற்கான வலிமையை வழங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x