Published : 27 Jun 2023 03:02 PM
Last Updated : 27 Jun 2023 03:02 PM

நடிகர் சல்மான் கானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த கேங்க்ஸ்டர்!

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் மும்பை போலீசாரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ராஜஸ்தானிலிருந்து அழைத்த மர்ம நபர் ஒருவர், தன் பெயர் ராக்கி பாய் எனவும், விரைவில் சல்மான் கானை கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார் தற்போது நடிகர் சல்மான் கானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோல்டி ப்ரார், “நாங்கள் அவரைக் கொல்வோம். நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். சல்மான் கான்தான் எங்கள் இலக்கு. அதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். நாங்கள் அதில் வெற்றியடையும்போது உங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

1998-ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ‘சிங்காரா’ வகை மான் ஒன்றை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘சிங்காரா’ மான் தங்கள் சமூகத்தின் புனிதமான விலங்கு என்பதால் அதற்கு பழிவாங்கும் வகையில் சல்மான் கானை கொல்வோம் என்று கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x