Last Updated : 31 Oct, 2017 02:53 PM

 

Published : 31 Oct 2017 02:53 PM
Last Updated : 31 Oct 2017 02:53 PM

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது என்று '6 அத்தியாயம்' பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசினார்.

அமானுஷ்யம் என்பதை மட்டும் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி இருக்கிறார்கள். '6 அத்தியாயம்' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

'ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர்கள் கேபிள் சங்கர், அஜயன் பாலா, தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் என 6 பேர் 6 அத்தியாயங்களை இயக்கியுள்ளார்கள்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பார்த்திபன், சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது:

சினிமா வியாபாரத்தை பற்றி பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால் அது அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. பர்மா பஜாரில் பத்து டிவிடி வாங்கினால் படம் இயக்கிவிடலாம். படம் இயக்கிவிட்டால் அதன்பின் கருத்து சுதந்திரம் என்று சமாளிக்கலாம். கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. காமராஜர் தோற்றதற்கு காரணம் சினிமா. மக்களிடம் நேர்மையாக ஒரு விஷயத்தை சொல்வதில்லை. தவறான விஷயத்தை சொல்லிவிட்டு பின்னர் கருத்து சுதந்திரம் என்று சொல்வது தவறான ஒன்று.

இங்கு கதாசிரியர்களை மதிப்பதில்லை. நடிகர் - இயக்குநர் இணைக்கு மட்டுமே மதிப்பு. இந்த படத்துக்கு எடுத்த முயற்சியை விளம்பரப்படுத்துவதிலும் செலுத்தி, சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவுக்கு இரண்டு புதிய பிஆர்.ஓக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.

சேரன் கொண்டு வந்த சி2எச் ஏன் தோல்வி அடைந்தது என்று பார்த்திபன் தான் பதில் சொல்லவேண்டும். அவர் தான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர். பைரசியை தடுத்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது. நடிகர்களே அதற்கு காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

ஒன்பது மாதங்களாக என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள்?. ஜிஎஸ்டிக்கு வேலைநிறுத்தம் அறிவித்தீர்கள். ஆனால் 2 சதவீதம் குறைத்தவுடன் வாபஸ் வாங்கினீர்கள். தமிழ் சினிமா டிஜிட்டல் என்று தெரிந்துவிட்டது. சேரனை ஆதரிக்காதது தமிழர் என்ற காழ்ப்புணர்ச்சி தான். சேரனை அழைத்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?

பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேருக்காகத் தான் சங்கம் நடக்கிறது. ஆன்லைன் வியாபாரத்தை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் விளக்கி இருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா? எங்கள் தலைவர் க்யூப் கட்டணத்தை குறைக்க இருப்பதாக சொன்னார். ஆனால் அதிகமாகத் தான் ஆகியிருக்கிறது. 32 ஆயிரமாக ஏறிவிட்டது. கேபிள் தொலைக்காட்சியின் மூலம் ஒன்றரை கோடி எப்படி வரும்? நிஜமான சிடி மார்க்கெட்டை திறந்துவிட்டால் தான் திருட்டு டிவிடி ஒழியும். அரசாங்கம் போலத் தான் இவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

திரையரங்குகளிலிருந்து மூன்று மாதங்கள் கழித்துதான் வசூல் விபரம் வருகிறது. இது உடனே கிடைக்க ஆவண செய்தால் என்ன? இது போன்ற என்னுடைய ஆதங்கத்தை பார்த்திபன் தான் சங்கத்திற்கு எடுத்து செல்ல வெண்டும். தீபாவளிக்கு பத்தாயிரம் கொடுக்கவும், பொங்கலுக்கு வேஷ்டி சேலை கொடுக்கவும் தான் சங்கமா? எப்போதும் விஷாலுக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு விஷால் உள்பட அனைத்து ஹீரோக்களுமே நண்பர்கள் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x