

பாரிஸ்: பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ என்ற பெயரில் கடந்த 14-ம் தேதி மாநாடு தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றன.
மாநாட்டின் இறுதி நாளான நேற்று இந்தியாவின் யுபிஐ சேவை பிரான்ஸ் நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தச் சேவையை அறிமுகம் செய்தார். அவர் கூறும்போது, “உலகத் தரம் வாய்ந்த யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பிரான்ஸ் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். இந்தியா, பிரான்ஸ் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும்’’ என்றார்.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறும்போது, “பிரான்ஸின் சில விமான நிலையங்களில் ஏற்கெனவே யுபிஐ சேவை அமலில் உள்ளது. தற்போது பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது’’ என்றார்.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சிங்கப்பூர், நேபாளம், பூடான், இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யுபிஐ சேவை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் இந்தச் சேவை அறிமுகமாகிறது. சைப்ரஸ், கிரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் யுபிஐ சேவையை அமல்படுத்த ஆர்வமாக உள்ளன. இதுதொடர்பாக சுமார் 30 நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.