

வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன்.
சென்னை: தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலக் கட்டமே இந்த வெள்ளை அறிக்கையின் மையப் பகுப்பாய்வுக் காலமாகும். கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சிக் காலத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் நிதி நிலையைச் சீரமைத்துள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி குறியீடுகள் எதிர் திசையிலேயே நகர்ந்துள்ளன.
தமிழகத்தில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது கரோனா பெருந்தொற்று ஆண்டை விடவும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. மாநில சொத்து வரி வருவாய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போதைய நுகர்வுச் செலவுகளை ஈடுகட்டவேமாநிலம் கடன் பெற்றுள்ளது என்பதை இது காட்டுகிறது. அதன்படி, தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள், 2021 ஏப்.1-ம் தேதி முதல் 2026 மார்ச் 31-ம் தேதி வரை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், தனிநபர் கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.
அதேபோல், ஆண்டு வட்டிச் சுமையானது 2021-22-ம் ஆண்டில் ரூ.41,564 கோடியாக இருந்த நிலையில், 2025-26-ல் ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 22.8 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 34.8 சதவீதத்துக்கு மேல் வட்டி செலுத்துவதற்கே செல்கிறது. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக வட்டியே உள்ளது. மேலும், ஜிஎஸ்டி, பெட்ரோலிய வரிமற்றும் மதுபான வரி போன்றவற்றில் முறையான மேலாண்மை இல்லாததால் ஆண்டுக்கு ரூ.51,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. புதிய திட்டங்களுக்கு மூலதனச் செலவு வெறும் 11.8 சதவீதம் மட்டுமே உள்ளது.
மின்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது. போக்குவரத்துத் துறையில் ஒரு கி.மீ. செலவு ரூ.78.81 ஆகவும், வருவாய் ரூ.25.97 ஆகவும் உள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்துக் கணக்கிடும் போது, மொத்த நிதிச்சுமை ரூ.13.18 லட்சம் கோடியை எட்டுகிறது. கடந்த 2021 - 2026 ஆண்டு காலக் கட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டு கால கடன், மாநிலம் தனது முதல் 60 ஆண்டு காலத்தில் பெற்ற கடனை விட அதிகமாகும். 2025-26-ம் ஆண்டின் முதல் நிலை கணக்குகளின்படி நிதிப் பற்றாக்குறை ரூ.1,33,208 கோடியாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது இதுவரை பதிவானவற்றில், மிக உயர்ந்த நிதிப் பற்றாக்குறையாகும்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, வருவாய் திரட்டுவதை அதிகரித்தல், செலவினங்களை முறைப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் அவசியம் என்று வெள்ளை அறிக்கை பரிந்துரைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.