

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
புதுடெல்லி: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் (இசிஎம்எஸ்) கீழ் பயன்பெறும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை இந்தியாவிலேயே வடிவமைக்காவிட்டால் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்காது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தில் (இசிஎம்எஸ்) பங்கேற்கும் நிறுவனங்கள், வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் பணியோடு நின்றுவிடாமல், உள்நாட்டிலேயே தயாரிப்புகளை வடிவமைக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். உள் நாட்டுத் தொழில் சூழலை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டாத நிறுவனங்களை இந்தத்திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த மத்திய அரசு தயங்காது.
இதுவரை இந்தத் துறையில் நிறுவனங்கள் காட்டி வரும் முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பு நாங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதே உண்மை. நிறுவனங்களின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கின்றன. வடிவமைப்பு மற்றும் தர மேம்பாட்டுப் பணிகளில் நிறுவனங்கள் மெத்தனமாகச் செயல்படுவதை ஏற்க முடியாது. தொழில் துறையினர் தங்களைச் சீர்படுத்திக் கொள்ளாவிட்டால் மத்திய அரசு கடுமையான முடிவுகளை எடுக்கும்.
அரசு எதிர்பார்க்கும் தரநிலைகளை நிறுவனங்கள் எட்டத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நிதி மற்றும் புதிய அனுமதிகள் உடனடியாக நிறுத்தப்படும். மேலும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட திட்டங்களாக இருந்தாலும், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் நிறுத்தி வைக்கப்படும்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் ரூ.7,104 கோடி மதிப்பிலான 29 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இசிஎம்எஸ் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ரூ.59,350 கோடி முதலீட்டு இலக்கை விட அதிகமாக, இதுவரை ரூ.61,671 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளை உற்பத்தி செய்வதைக் காட்டிலும் அதன் வடிவமைப்பில்தான் அதிக மதிப்பு அடங்கியுள்ளது. தயாரிப்புகளுக்கான அடிப்படை வரைபடம் முதல் பொறியியல் வடிவமைப்பு வரை அனைத்தும் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கான உண்மையான பலன் கிடைக்கும். உற்பத்தி செய்வது எளிது, ஆனால் ஒரு வடிவமைப்பைத் துல்லியமான தரத்துடன் இறுதித் தயாரிப்பாக மாற்றுவதுதான் சவாலானது.
சர்வதேசத் தரத்தைப் பேண 'சிக்ஸ் சிக்மா' போன்ற தரக்கட்டுப்பாட்டு முறைகள் அவசியமானவை. அதேபோல், நிறுவனங்கள் வெறும் உள்கட்டமைப்பில் மட்டும் முதலீடு செய்யாமல், திறமையான மனித வளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.