

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மே மாதம் முழுவதும் நிலவிய கடுமையான கோடை வெயில் காரணமாக, மின்சார நுகர்வு சுமார் 11% அதிகரித்துள்ளது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏசி பயன்பாடு பெருமளவு உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கிரிட் இந்தியா அமைப்பின் புள்ளிவிவரங்களில், ‘‘கடந்த ஆண்டு மே மாதத்தில் 148.7 பில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் நுகர்வு, இந்த ஆண்டு மே மாதத்தில் 11% உயர்ந்து 165 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்தின் மின் நுகர்வான 154 பில்லியன் யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதத்திற்கும் அதிகமாகும்’’ என கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கடந்த மே மாதத்தின் பிற்பாதியில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், மின்சாரத்திற்கான தேவையும் உயர்ந்தது.
மே 11-ம் தேதி முதல் அதிகரிக்கத் தொடங்கிய மின் தேவை, அடுத்தடுத்த 4 நாட்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவைத் தாண்டியது. குறிப்பாக, மே 21-ம் தேதி வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 270.8 கிகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், மாதத்தின் இறுதிக்கட்டப் பகுதியில் மின் தேவை படிப்படியாகக் குறைந்தது.