18 நாட்கள், 48,000 பேர் வேலைநிறுத்தம் - சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பால் உலகமே அதிர்வது ஏன்?

18 நாட்கள், 48,000 பேர் வேலைநிறுத்தம் - சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பால் உலகமே அதிர்வது ஏன்?
Updated on
3 min read

உலகெங்கிலும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதும், வேலைநிறுத்தம் செய்வதும் நடப்பதுதான். ஆனால், தென் கொரியாவின் மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் சங்கம் (SELU - Samsung Electronics Labour Union) ஒரு மெகா வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. நாளை மே 21 தொடங்கும் இந்த வேலைநிறுத்தம் தொடர்ச்சியாக 18 நாட்கள் நடைபெறும் என்று ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கான ஊதியத்தில் பேதம் நிலவுவதாகவும், போனஸ் வழங்குவதில் நீடிக்கும் சிக்கலை முன்வைத்தும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. சாம்சங் நிறுவனத்தின் வரலாற்றில் இத்தனை நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் 18 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை உலகமே உற்று நோக்கத் தொடங்கியுள்ளது. அது ஏன்? இந்தப் போரட்டம் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பன குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

<div class="paragraphs"><p>அரசு முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைதோல்வி அடைந்த நிலையில் வெளியேறும் சாம்சங் ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி</p></div>

அரசு முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைதோல்வி அடைந்த நிலையில் வெளியேறும் சாம்சங் ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் எதிர்பார்ப்பு என்ன?

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர் சங்கமானது, நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும் போனஸ் தொகையின் உச்சவரம்பை ஊழியர்களின் ஆண்டு வருமானத்தில் 50% என நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும், வருடாந்திர செயல்பாட்டு லாபத்தில் 15%-ஐ ஊழியர்களுக்கான போனஸ் தொகுப்பில் செலுத்தி அதை ஊழியர்களுக்கு பிரித்துத் தர வேண்டும், போட்டி நிறுவனங்கள் வழங்குவதைவிட மிகக் குறைவான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். அதுவும் இந்த மாற்றங்கள் இந்த ஆண்டுக்கு என்று மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி ஊழியர்களுக்கு பலனளிக்கும்படி தொடரச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

கேட்டதும், கிடைத்ததும்...

போனஸ், ஊதிய பாகுபாடுதொடர்பான இந்த கோரிக்கை இந்தாண்டு ஜனவரி தொடங்கியே புகைந்து கொண்டிருக்க, மார்ச் மாதம் ஊழியர்கள் சங்கத்துடன் சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்கே ஹினிக்ஸ் (SK Hynix) எனப்படும் மற்றொரு குறைகடத்தி நிறுவனம், அதன் மெமரி சிப் தயாரிப்பு பிரிவு ஊழியர்களுக்கான ஊதியம், போனஸ் திட்டதோடு ஒப்பிட்டு போனஸ் விகிதத்தில் மாற்றம் செய்யப்படும் என்றது.

மேலும், லாஜிக் சிப் தயாரிப்புப் பிரிவு தொழிலாளர்கள் 50% முதல் 100% வரையிலான போனஸை பெறலாம், ஆனால் அது ஆண்டுக்கு ஒரு முறை என்றளவில் இருக்கும் என்றது. அதாவது, ஆண்டு வருமானத்தில் 50% தான் போனஸ் என்ற உச்ச வரம்பு நீக்கப்படாது என்றது.

உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் மெமரி சிப்களுக்கு தட்டுப்பாடு வர தென் கொரியாவின் சாம்சங் மற்றும் அதன் பிரதான எதிரி நிறுவனமான எஸ்கே ஹினிக்ஸ் தயாரிப்பை துரிதப்படுத்தி கொள்ளை லாபத்தை குவித்தன. உலகின் ஒட்டுமொத்த மெமரி சிப் தேவையின் பெரும் பகுதியை இந்த இரண்டு நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு எஸ்கே ஹினிக்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கான போனஸ் வழங்கலில் நிலவிய உச்ச வரம்பை 10 ஆண்டுகளுக்கு நீக்கியது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சாம்சங் ஊழியர்களைவிட அதிகமான போனஸைப் பெறக் கூடிய சூழல் உருவாகியது. இதனால் சாம்சங் நிறுவன ஊழியர்கள் பலரும் எஸ்கே ஹினிக்ஸ் நிறுவனத்துக்கு தாவினார்கள்.

இந்த நிலையில்தான் ஊதிய பாகுபாட்டை களைய வேண்டும், போனஸ் பே அவுட் விதிகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல் சாம்சங்கில் ஓங்கி ஒலிக்கிறது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு, சாம்சங் ஊழியர்கள் 6000 பேர் இதேபோன்றதொரு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் இந்தமுறை 48 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களில் 38% ஆகும்.

இந்தச் சூழலில், சாம்சங் நிறுவனம் கடந்த திங்கள்கிழமையன்று ஊழியர்களின் இந்த மெகா வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக தடையாணை கோரி நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “எந்தவொரு தொழிற் போராட்டத்தின் போதும் சில உற்பத்தி ஆலைகளில் அத்தியாவசியப் பணியாளர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும்,” என்று தீர்ப்பளித்தது.

இதை ஊழியர்கள் சங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ள, சாம்சங் நிறுவனமும் கோர்ட் விதிமுறையின் படி வேலைநிறுத்தம் நடந்தாலும் 7,087 ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தென் கொரியாவின் பியாங்டக் மற்றும் ஹவாசியோங்கில் உள்ள சாம்சங் மெமரி சிப் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியது. அங்கே மூன்று ஷிஃப்ட்களிலும் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

போராட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவு எப்படி அமலாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்குவது ஏன்?

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் 18 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை உலகமே உற்று நோக்கத் தொடங்கியுள்ளது.

ஏனெனில் சாம்சங் தான் உலகின் DRAM சிப் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஆண்டின் முடிவில் உலகத்தின் ஒட்டுமொத்த DRAM சிப் தேவையில் 36%-ஐ சாம்சங் பூர்த்தி செய்தது. ஏஐ டேட்டா மையங்களின் அத்தியாவசியத் தேவையாக இந்த மெமரி சிப்கள் இருக்கின்றன. இந்த நிலையில் உலகளவில் மெமரி சிப்களுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலுவும் சூழலில் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு எல்லைகள் கடந்த கலக்கத்தைக் கடத்தியுள்ளது.

என்னவாகும் இந்தப் போராட்டத்தால்..?

சர்வதேச தொழில்துறை அனலிஸ்ட் ஜெஃப் கிம், சாம்சங் ஊழியர்கள் திட்டமிட்டபடி 18 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், DRAM மெமரி சிப் சர்வதேச விநியோகம் 3 முதல் 4 சதவீதம் வரை பாதிக்கப்படும். NAND மெமரி சிப் விநியோகம் 2-ல் இருந்து 3% வரை பாதிக்கப்படும் என்றும், இது மேலும் சிப்களின் விலையுயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் கணிக்கிறார்.

தென் கொரிய அரசு அதிகாரிகளும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தென் கொரிய ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறது. தென் கொரிய ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே கால்வாசி பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த 18 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தென் கொரியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தென் கொரிய மத்திய வங்கியும் அஞ்சுகிறது. மிக மோசமான பாதிப்புகளுக்குக் கூட வழிவகுக்கும் என்றும் கணிக்கிறது.

இந்தப் போராட்டம் நடந்தால் 30 ட்ரில்லியன் தென் கொரிய நாணயம், அதாவது 19.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் தயாரிப்பு ஸ்தம்பிக்கும். கூடவே, அடுத்த சில வாரங்களுக்கு உற்பத்தியில் சுணக்கமும் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், தென் கொரிய அரசு தாமாக முன்வந்து சாம்சங் நிறுவனம் - அதன் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

18 நாட்கள், 48,000 பேர் வேலைநிறுத்தம் - சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பால் உலகமே அதிர்வது ஏன்?
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறையால் மதிப்பெண் குறைகிறதா? - சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in