ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
3 min read

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும், இந்த அங்கீகாரம், அந்நாட்டின் அரசியல் பரிணாம வளர்ச்சியை மட்டுமல்லாமல் அசாதாரண பொருளாதார ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்க டாலர் என்பது அந்நாட்டின் தேசிய நாணயம் என்பதை விட வேறு பல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளால், இருப்பு வைக்கப்படும் கரன்சியாக டாலர் மாறிவிட்டது. ஒரு நாட்டுக்கும், மற்றொரு நாட்டுக்கும் இடையே எல்லை கடந்த வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடத்தப்படுகிறது, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்துக்கும் டாலர் ஆதாரமாக இருக்கிறது.

அமெரிக்காவில் காலணி ஆதிக்கம் முடிந்து சுதந்திரம் அடைந்தபின் 1792-ம் ஆண்டு நாணயச் சட்டம் இயற்றப்பட்டு, அமெரிக்க டாலர் அதிகாரபூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சில பத்தாண்டுகள் வரை அமெரிக்க டாலர் என்பது அதன் எல்லைக்கு அப்பால் செல்லாமல், செல்வாக்கு பெறாமல்தான் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இப்போது டாலர் இருப்பதைப் போல உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் இருந்தது. இது பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தையும், வர்த்தகத்தின் சக்தியையும் வெளிப்படுத்தியது.

திருப்புமுனை மாற்றம்

முதலாம் உலகப் போரின்போது 1914 மற்றும் 1918-ம் ஆண்டுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகள் உணவு, தொழிற் துறை பொருட்கள், ராணுவத் தளவாடங்கள், மூலப்பொருட்களை அமெரிக்காவிடம் வாங்கத் தொடங்கின. இதுதான் அமெரிக்கா வளர்வதற்கு முதல் காரணமாக அமைந்தது.

பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அதிகமாக கொள்முதல் செய்ததால் மெதுவாக ஐரோப்பாவின் தங்கம் கையிருப்பு குறைந்தது. உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் லேவாதேவியாக இருந்த பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. உலகளாவிய நிதி மையத்தின் சமநிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் வரை பரவியது.

பிரிட்டன் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் தேசமாக இருந்தாலும், முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து, உலக நாடுகளுக்கு தேவையான அளவு கடன் கொடுக்கும் நாடாக வளர்ந்தது. இந்த மாற்றம் 2-ம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு அடித்தளமிட்டது.

பிரெட்டன் உட்ஸ் மாநாடு ஏன் நடந்தது?

அமெரிக்காவின் நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் உள்ள பிரெட்டன் உட்ஸ் நகரில் உள்ள மவுன்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 1944-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்த பிரெட்டன் உட்ஸ் (Bretton Woods Conference) மாநாடு நடந்தது. இதற்கு அமெரிக்க நிதி மற்றும் பணவியல் மாநாடு என்ற பெயரும் உண்டு. இந்த மாநாட்டில் 44 சார்பு நாடுகளும், அதன் 700 பிரிதிநிதிகளும் பங்கேற்றனர்.

2-ம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில், சர்வதேச நிதிச் சூழலை வலுவாகக் கட்டமைக்கவும், புதிய நிதிக் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு நடந்தது. உலக தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வைத்திருந்ததால், இந்த மாநாட்டில் அமெரிக்காவின் கை ஓங்கி, வலுவான முடிவுகளை எடுத்தது. 2-ம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் பெரும் சேதத்தை எதிர்கொண்டிருந்ததால், அமெரிக்காவின் வார்த்தைகளும், முடிவுகளும்தான் மேலோங்கி இருந்தது.

மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு நாடும் தங்கள் தேசத்துக்கு கரன்சியை தங்கத்துடன் நேரடித் தொடர்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கி, தங்கள் கரன்சியை அமெரிக்க டாலருடன் இணைக்க ஒப்புக்கொண்டன. அந்த நாடுகள் வைத்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 35 டாலர் நிலையான விலையில் தருவதாக அமெரிக்கா உறுதியளித்தது.

இந்த வசதி சர்வதேச நிதிச் சூழலை மறுக்கட்டமைப்பு செய்து, உலக பணவியல் முறையில் ‘டாலர்’ என்பது மையமாக மாறத் தொடங்கியது, சர்வதேச அளவில் தங்கத்துக்கு மாற்றாக டாலர் என்பது ‘லிக்விட் கரன்சி’யாக ஏற்கப்பட்டது.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு அடித்தளமிட்டது இந்த பிரெட்டன் உட்ஸ் மாநாடுதான். இந்த மாநாடு நடந்து முடிந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

நிக்ஸன் முடிவால் என்ன நடந்தது?

1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவின் அதிபராக இருந்த ரிச்சார்ட் நிக்ஸன் தொடர்ந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுதான் ‘நிக்ஸன் ஷாக்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

டாலரை நேரடியாக தங்கமாக மாற்றும் திட்டத்தை அதிபர் நிக்ஸன் திடீரென தடை செய்து இன்று வரை நடைமுறையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கரன்சி வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

‘பெட்ரோடாலர்’ முறை

1974-ம் ஆண்டு சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யவும் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஏற்பாடுதான் ‘பெட்ரோடாலர்’ முறை என அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தங்கத்தை சார்ந்திருப்பதற்கும், அதில் வர்த்தகம் நடப்பதற்குப் பதிலாக, டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன்மூலம் டாலர் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை வளர்த்துக் கொண்டது.

அமெரிக்க டாலரை முன்னிலையில் வைத்திருப்பது எது?

பிரெட்டன் உட்ஸ் மாநாடு, நிக்ஸன் ஷாக் முடிவுகளுக்குப் பின் அமெரிக்க டாலரை பல தசாப்தங்களாக வலுவாக வைத்திருக்க பல கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் உதவுகின்றன. அவை:

முதலாவதாக, முதல் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட பணவியல் கட்டமைப்பு முக்கியக் காரணமாகும். 1971-ம் ஆண்டு பிரெட்டன் உட்ஸ் மாநாட்டுக்குப் பின், நிலையான நாணய மாற்று விகிதம் மறைந்துவிட்டது. ஆனால் , அதில் எடுக்கப்பட்ட பல முடிவுகள், உலக நாடுகள் தங்கள் பரிவர்த்தனைக்கு டாலரை சார்ந்திருக்குமாறு செய்ய ஊக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவதாக, ‘பெட்ரோடாலர்’ சிஸ்டம் ஆகும். இது டாலருக்கான தேவையை செயற்கையாக அதிகரிக்கச் செய்தது. கச்சா எண்ணெய் வியாபாரம் டாலரில் நடந்ததால், எரிபொருள் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது.

மூன்றாவதாக இன்றுள்ள நிதி அமைப்பாகும். அமெரிக்க முதலீட்டுச் சந்தை பரந்த, ஆழ்ந்ததாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும், முதலீட்டாளர்களும் எந்த சொத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பணப்புழக்கம் (லிக்குடிட்டி) முக்கியக் காரணமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய அமெரிக்க சந்தை சரியான தேர்வாக இருக்கிறது.

நான்காவதாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்பில் அந்நியச் செலாவணியாக 60 சதவீதம் டாலரைத்தான் இருப்பாக வைத்துள்ளன. இது டாலருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து வலுப்பெறச் செய்துள்ளது.

அமெரிக்க சட்டங்கள் மீதான நம்பகத்தன்மை, வலுவான அரசியல் அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக திருத்திக்கொள்ளும் வசதி காரணமாகவே உலகளாவிய நிதி அமைப்புகள் சீராகச் செயல்படுகின்றன.

மகுடத்தை இனி தக்க வைக்குமா டாலர்?

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தைக் குறைக்க ‘வரும் ஆண்டுகளில் டாலர் பயன்பாட்டைக் குறைத்தல்’ என்ற குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் தங்கள் நாட்டு கரன்சியால் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசிக்கின்றன.

பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்க டாலரின் வலிமை முன்பு இருந்ததைவிட சற்று குறைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு 70% இருந்த நிலையில், தற்போது, 58 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அதற்காக உலகளவில் டாலரின் தாக்கம் குறைந்துவிட்டது என்று கருத முடியாது.

உலக நாடுகள் கையிருப்பில் டாலர் வைத்திருப்பது, டாலரில் கடன் பெறுவது, டாலரில் வர்த்தகம் நடைபெறுவது போன்ற முறைகள் இருக்கும் வரை டாலரின் தாக்கம் இருக்கும்.

அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட கரன்சியாக டாலர் மாறியிருப்பதும், நம்பகத்தன்மையான, வலிமையான கரன்சியாக டாலர் இருப்பதாலும், கச்சா எண்ணெய் வர்த்தகம் முழுமையாக டாலரில் நடப்பதாலும் டாலரின் மகுடம் இன்னும் பல தசாப்தங்களுக்கு இறங்க வாய்ப்பில்லை.

ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு - ஏன் இந்த தாமதம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in