

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.10) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1000 உயர்ந்து விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக தங்கம் விலை மாற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று (வெள்ளிக் கிழமை) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,13,000-க்கு விற்பனையாகிறது.
18 காரட் தங்கம் ரூ.125 உயர்ந்து கிராம் ரூ.11,775-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,409-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.